Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
நாம் முஸ்லிம்களாக பிறந்தும் அதன் அருமைப் பெருமையை உணராமல் வாழ்ந்து இருக்கிறோம். கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளோ மிக அதிகம். பொன்னான நேரத்தை வீணாக்கினோம். மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தோம். அல்லாஹ்வை மறந்து ஷைத்தானின் அடிச்சுவடியைப் பின்பற்றினோம்.
ஆனால் இன்று நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம் இன்னும் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறோம். ஆனால் இவைகளை ஒருகாலத்தில் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாம் இன்று திருந்தி வாழ்ந்தாலும் ஏனோ நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்த்தால் உள்ளம் நடுங்குகிறது. எப்படி எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து விட்டது. இப்படி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காமலிருந்தால் நல்லாயிருக்குமே. ஆனால் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.
இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா? மன்னிக்கமாட்டானா? மன்னித்து நம்மை சுவர்க்கத்தில் நுழையவைப்பானா? அல்லது நரகில் தள்ளுவானா? போன்ற கவலைகள் நம் உள்ளத்தில் தேங்கியுள்ளது. நம்மில் எழும் இக்கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு பதில் கூறுகிறான்.
7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அன்றைய அரபு மக்கள் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். என்பதை யாவரும் அறிவர். கொலை கொள்ளை, குடி, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களையும் செய்தும் வந்தனர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருந்தி உண்மையான இஸ்லாத்தின் பக்கம் வந்த பின் அவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும் .
25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
இவ்வசனத்தை அறிந்த அன்றைய அரபு மக்களில் ஒரு சிலர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்குமுன் கொலை கொள்ளை விபச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி வசனப்படி இறையடியாளர்களாக முடியுமா? அதற்கு ஏதும் பரிகாரமுள்ளதா? எங்களூக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்குமா? என வினவினார்கள். அதற்கு பதிலாக அல்லாஹ் அருளிய இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.
39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.
மேலும் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதை அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.
வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer