அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

பெற்றோர்களே

அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் இப்பெரும் பாக்கியமான நம் குழந்தைச் செல்வங்களை திறமையாய் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் ஏன்வளர்க்கக்கூடாது..? சீர்திருத்தங்களைப்பற்றி சிந்திக்கக்கூடாதா..? செயல் படுத்த இன்னும் எதற்கு தாமதம்..?

 நம் குழந்தைகளை சுயமாய் சிந்திக்கும் திட்டங்களை வகுக்கும் செயலாற்றும் சமூகமாய் நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.

இதற்கு அடிப்படையாய் ஆரோக்கியம், கல்வி, நற்சூழ்நிலை குழந்தைகளை சென்று அடைய வேண்டும்.

ஆரோக்கியம் : சிசுக்களின் முதலாவதும், மிகப்பிரதானமான உணவாக இருப்பது தாய்ப்பால் தான். நாகரிகங்களை விரும்பும் சில தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. கேட்டால் கவர்ச்சி போய் விடும் என்பது போன்ற பல காரணங்களை சொல்வார்கள். தாய்ப்பால் இறைவன் கொடுத்த ஒரு அருட் தான். அதனை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருந்தால் பல நோய்களை தாய்மார்கள் அடைவார்கள். தாய்ப்பாலை பிள்ளைகளுக்கு கொடுத்தால் பிள்ளைகளும் சரியே, தாயும் சரியே பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பதும் உண்மை தான். தாய்ப்பாலை விட அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எதுவுமே கிடையாது. தாய்மார்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது,

தங்களுடைய குழந்தைகளுக்கு தம் மனைவிகளைக் கொண்டே பால் ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள் வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள்.(அல்குர்ஆன் 2:233)

தாய்ப்பால் பிள்ளைக்கும் தாய்க்குமிடையில் அன்பையும், பாசப்பிணைப்பையும், நெருக்கமான உறவையும், நேசத்தையும் அதிகப்படுத்தும் அச்சாணியாய் அமைவது என்பதை தாய்மார்களே.. மறந்திட வேண்டாம்.

மேலும், தம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான சிறந்த உணவுகளும், பழ வகைகளும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கால நிலைகளிலும் கிடைக்கும் பற்பழங்கள் உடல் சமநிலை பேண உதவும்.

மனிதனுக்கு மனிதன் உடல் நிலையில் மாறுபாடு உண்டு. எனவே எந்த எந்த உணவு தம் பிள்ளையின் உடல் நிலைக்கு உகந்தது, எந்த உணவுகள் ஒவ்வாமை (அஜீரணிக்கக்கூடியது) என்பதையும், பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவுகள் எது என்பதையும் பெற்றோரே அறிவார்கள். அதிலும் தந்தைமார்களை விட தாய்மார்களே நன்கறிவார்கள். எனவே நாம் சமைக்கும் உணவானாலும், கடைகளில் வாங்கும் உணவானாலும் தன் குழந்தைக்கு எந்தளவுக்கு ஊட்டத்தையும், அதிக சக்தியையும் வழங்கும் என்பதினை அறிய வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் இருக்க வேண்டும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு எந்தளவுக்கு பங்களிப்பு செய்யும் என்பதையும் பெற்றோர்கள் தெளிவாய் அறிந்திருப்பது அவசியம்.

இன்று, நாம் பார்க்கிறோம் சில மாணவர்கள் மாதத்தில் பாதி நாட்கள் பாடசாலைக்கு வருவதில்லை. காரணம் தொடர்ந்து நோய் வருவதே.. சில நேரம் கெட்டித்தனமாய், ஆர்வமாய் படிக்கும் மாணவர்களும் நோயால் பாதிக்கப்படுவது தான் சோகம். இதற்கு அடிப்படைக்காரணம் குழந்தைப்பருவத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளே. குழந்தைகளில் உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் பெற்றோர்களே.. ஏனெனில் நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளால் தான் நன்கு சிந்திக்கவும், செயல்படவும், கிரகிக்கவும் செயல்படவும் முடியும்.

கல்வி : ஒரு குழந்தையின் முதலாவது பள்ளிக்கூடம் வீடு தான். அங்கு பெற்றோரும், வீட்டிலுள்ள அனைவரும் ஆசிரியர்களே. வளரும் பயிர் முளையிலே தெரியும்.. அந்த வித்தை, முளையை இனம் கண்டு செழித்து வளர உரமாய்.. உந்து சக்தியாய்.. இருப்பவர்களே இந்த வீட்டு ஆசிரியர்கள்.

கல்வியில் சிறந்த கல்வி நல்லொழுக்கம் தான். முதியோரை மதித்தல், பகிரிந்தளித்தல், பொறுமை, நீதியாய் நடத்தல், நல்ல வார்த்தைகளை மட்டும் பேசுதல் இது போன்ற நல்ல பழக்கங்களையும், பொறாமை, கோள், அவதூறு, மோசடி செய்தல், திருடுதல் போன்ற தீய செயல்களை தவிர்ந்து நடக்கவும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

எல்லாத்தீய பழக்கங்களுக்கும் முதுகெலும்பாய் உள்ளது பொய் தான். எனவே தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், விளையாட்டுகாகவேணும் பொய்யை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என நவின்றுள்ளார்கள்.ஆதாரம் : அபூ தாவூத்

மேலும் கூறியுள்ளார்கள்..

யாரேனும் ஒரு குழந்தையிடம்.. வா.. இதோ வாங்கிக்கொள்.. என்று கூறி பிறகு அதைக் கொடுக்கவில்லையெனில் அதுவும் பொய்யே ஆகும்.அறிவிப்பாளார் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - அஹ்மத்

பிள்ளைகளை பொய் பேசுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். பொய் பேசினால் அதன் அர்த்தம் தவறோ, அநீதியோ, துரோகமோ செய்கிறார்கள் என்பதே பொருள்.

இஸ்லாம் நல்ல பழக்க வழக்கங்களை நமக்கு தெளிவாய் கற்றுத்தந்து இருக்கிறது. நகம் வெட்டுதல், பல்துலக்குதல், மலஜலம் கழித்தல், குளித்தல் என முழு வாழ்க்கைத்திட்டமாய் பரந்து விரிந்திருக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் துஆக்களையும் கற்றுத்தர தவறவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சுன்னத்தான துஆக்களை கண்டிப்பாய் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும். பெற்றோர்களும் துஆக்களை படித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொடுத்து கொண்டே இருக்க முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படும் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வஇலைஹின் னுஷுர்.

பொருள் : நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக..! ஃபத்ஹுடன் புகாரீ. பாகம் 11. பக்கம் 113. முஸ்லிம். பாகம் 4. பக்கம் 2083.

கழிவறையில் நுழையும் போது துஆ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாயிஸி

பொருள் : யா அல்லாஹ்.. ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

குஃப்ரானக.

பொருள்: உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள் : திர்மிதீ. அபூதாவூது. இப்னுமாஜா

வீட்டிலிருந்து புறப்படும் போது

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல லா குவ்வத இல்லா பில்லாஹி.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும் அல்லாஹ்வைக்கொண்டல்லாது (பாவத்திலிருந்து திரும்புதலும், நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை. திர்மிதீ 5,490 அபூதாவூது 4,325

வீட்டினுள் நுழையும் போது துஆ

பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மிலாஹி கரஜ்னத, வஅலா ரப்பினா தவக்கல்னா.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

இது போல் இன்னும் பல துஆக்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் பெற்றோர்கள் முதலில் தெரிந்துக்கொண்டு அதனை சிறார்களுக்கு சொல்லி பழக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள துஆக்கள் சில உதாரணம் தான்.

சில பெற்றோர்கள் நாகரீகம் என்ற பெயரில் மோசமான மற்றும் இஸ்லாம் அங்கீகரிக்காத தீய பழக்க வழக்கங்களை தன் பிள்ளைகளுக்கு அவர்கள் பழக்குகிறார்கள். அல்லது அவர்கள் இத்தகைய செயல்களை செய்வதை விட்டும் தடை செய்வதும் இல்லை. திக்ரு மற்றும் துஆக்களை கற்றுக்கொடுப்பதை விட்டும் அவர்கள் பராமுகமாக இருப்பதால் பிள்ளைகள் தொலைக்காட்சியில் மற்றும் திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்ன பஞ்ச் வசனங்களை சொல்கிறார்களோ அதனை அவர்களும் சொல்கிறார்கள். மற்றும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப என்ன திரைப்பட பாடல் பிடித்து இருக்கிறோதோ அந்த திரைப்படத்தினை பாடல் வரிகளை ஒன்று விடாமலும் மற்றும் மறக்காமலும் அடி பிறழாமல் பாடி வருகிறார்கள், விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் என் மகன்.. இந்த பாட்டை நல்ல பாடுவான்.. அந்த பாட்டை நல்லா.. பாடுவான் என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மிஞ்சுவார்கள்.

கெட்ட சினிமா பாடல்களினால் சிறார்கள் உடல், மனம், சிந்தனையானது பிழையான மற்றும் தவறான எண்ணங்களை தேடிக்கொள்கிறது. சில பெற்றோர்கள் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய பிள்ளைகளும் தாய் தகப்பன் என்ன வழியோ அந்த வழியினை பின் தொடர்கிறார்கள். பிள்ளைகளுக்கு தெரியாது.. நல்லது எது.. கெட்டது எது என்று. நாம் தான் அவர்களை நல் வழிப்படுத்தி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது தப்பில்லை, ஆனால்.. அதில் உள்ள தரமான நிகழ்ச்சிகளை கல்விக்கும் எதிர்காலத்துக்கும் உதவக்கூடிய நிகழ்ச்சிகளை இனங்கண்டு அவைகளின் நேரங்களை அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பது குற்றமில்லை. பிள்ளைகளின் பெறுமதியான ரேநங்களையும், பாடசாலையின் வீட்டு வேலைகளையும், உடல் ஆராக்கியங்களை தரக்கூடிய விளையாட்டுக்களையும் சிதைப்பது இந்த தொல்லைக்காட்சி தான். தொலைக்காட்சியில் வீணடிக்கும் நேரங்களை திருக்குர்ஆனை ஓதவும், மனம் செய்யவும் பழங்குங்கள். எனவே நம் பிள்ளைகளுக்கு தினமும் நல்ல பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் மனிதன் முழு மனிதனாவான். அத்துடன் கைப்பணிப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியையும் கற்றுக்கொடுங்கள் இதனால் புதிய கண்டு பிடிப்புகளுக்கும், சுயமாய் சிந்திக்கும் ஆற்றலுக்கும் இப்படியான முயற்சிகள் வித்திடுவதோடு சுய தொழில்களை கற்றுக்கொள்ளவும் அடிப்படையாய் அமையும்.

தற்போதைய கல்வித்திட்டங்களை எடுத்துப்பார்த்தால் நம் பெற்றோருக்கும் நமக்கும் உள்ள கல்வித்திட்டங்களுக்கு இடையில் சிறிய வித்தியாசம் உண்டு. நமக்கும் நம் பிள்ளைகளின் கல்வித்திட்டங்களுக்கு இடையில் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தற்போதைய கல்வித்திட்டங்களில் புதிய கண்டுபிடிப்புகள், அதியுயர் தொழில் நுட்பம், நவீன விஞ்ஞானம், மருத்துவம் என அதிசயத்தக்க பிரமிக்கக்கூடிய பல பரிமானங்களை அடைந்துள்ளது.

தற்போது நாற்பது அல்லது நாற்பதைந்து வயதிலிருக்கும் ஒருவர் 15 அல்லது 20 வயது பூர்த்தி அடைந்தப்பின்னர் தான் கணிணியின் அறிமுகத்தையும் அறிவையும் பெற்றிருப்பார். நம் பிள்ளைகள் அவர்கள் பிறக்கும் போதே நவீன தொழில் நுட்ப சாதனங்களை அறிந்தவர்களாக 20 அல்லது 25 வருடங்கள் முன்னோக்கியவர்களாக பிறக்கிறார்கள். எனவே நம் பிள்ளைகள் நாம் எதிர் கொண்ட சவால்களை விட இவர்களுக்கு நிறைய சவால்களும் போட்டிகளும் பொறுப்புகளும் மிகவும் அதிகம்.

இவ்வுலகத்தின் அதி வேக முன்னேற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்களாக பிள்ளைகளை குழந்தைப்பருவத்திலிருந்தே தயார் படுத்த வேண்டும். எதிர் கால திட்டங்களோடு வளர்க்கப்படும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அறிவாற்றிலும் ஆளுமையிலும் நல்லொழுக்கங்களிலும சிறந்து விளங்குகிறார்கள். எனவே பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடனும், தூர நோக்குடனும் திpட்டமிட்டு செயல்பட வேண்டும்..

ஒரு பிள்ளை கெட்டித்தனமாக நல்ல பிள்ளையாகவும் கெட்ட பழக்கமுள்ள பிள்ளையாகவும் மாறுவது சூழலால்தான். நல்ல சூழலிலுள்ள நல்ல பிள்ளைகளுடனேயே நம் பிள்ளைகளையும் விளையாட விட வேண்டும். சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட விடாமல் எந்த நேரமும் படி படி என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சலும், உடல் சோர்வும், சோம்பேறித்தனமும் தான் உண்டாகும். குறிப்பிட்ட நேரம் பிள்ளைகளை சுதந்திரமாக தாங்களின் கண்காணிப்பில் விளையாட விட வேண்டும். விளையாட்டுகளிலும் நம்முடைய பிள்ளைகளுக்கே தலைமைத்துவ பொறுப்புகளைக் கொடுங்கள். இதனால் பிள்ளையின் ஆளுமையும், செயல் திறனும், சிந்தனை சக்தியும் அதிகரிக்கும். நீங்களும் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்தால் அவர்களைப்பற்றி தெளிவாய், முழுமையாய் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும், வீட்டுக்கு கொண்டு வரும் புதிய பொருட்களைப்பற்றி ஏது..? எங்கிருந்து எப்படி வந்தது என்பதனை பற்றி விசாரிக்க வேண்டும். அதே நேரம் நம் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்களை வெளியே கொண்டு போகிறார்கள் என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள். அவர்களின் திறமைகளை உடனுக்குடன் மனம் திறந்து பாராட்டுகள் புகழுங்கள் முடிந்தால் சின்ன சின்ன பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்வித்து ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் வாக்களித்தால் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். எக்காரணத்திற்காகவும் ஏமாற்றாதீர்கள். அவர்களின் தவறுகளை அன்போடும் பக்குவமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். தவறுகள் அவர்கள் தான் செய்தார்கள் என்று கற்பனை பண்ணி அவர்கள் மீது வீண்பழி சுமத்தி குற்றக்காரனாக சண்டைக்காரனாக ஆக்கி விடாதீர்கள். அதனால் தீய சிந்தனையும் மற்றவர்களை மதிக்காத குணங்களும் வெறுப்பும் விரக்தியும் உண்டாக காரணமாகி விடும். சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் ஏசுவதும் அடிப்பதும் பல பேர் முன் அவமானப்படுத்துவதும் சில பெற்றோர்கள் சர்வசாதாரணம் என நினைத்து அவர்களை புண்படுத்துகிறார்கள். இப்படியான நடவடிக்கைகளை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பு இருக்க வேண்டும்.. தண்டிக்க தான் வேண்டும்.. ஆனால் அதனால் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்காத விதத்தில் செய்த தவறை தெளிவுப்படுத்தி அதனை ஏற்க செய்து உணர்ந்து திருந்தும் வகையில் தண்டிக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர்களிடம் அடி வாங்குவார்கள். என்ன காரணத்திற்காக அடி வாங்கினோம் என்ற உண்மை அவர்களுக்கு தெரியாமலிருக்கும். அடிக்கும் விசயத்தில் நிதானமும் பொறுமையும் அவசியம் இல்லாவிட்டால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தண்டிக்க போய் எதிர் பாராத தாக்கங்களும், மாற்றங்களும், விபரீதங்களும் பிள்ளையின் பிஞ்சு நெஞ்சத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை எனவே பிள்ளைகளின் உள்ளங்களில் நல்ல கருத்துகளை, தூய்மையான எண்ணங்களை, பரந்த மனப்பான்மைகளை விதைத்து விடுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை நல்லொழுக்கங்களை வீட்டில் கற்றுக்கொடுங்கள். இஸ்லாத்தை மனதின் ஆழத்தில் பதிந்து விடுங்கள். கல்வி, விளையாட்டு என சகல துறைகளிலும் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் திகழ உங்களின் வாழ்க்கையினை அர்ப்பணியுங்கள். இன்றைய சிறுவர்களே.. நாளைய தலைவர்கள்.. எதிர் கால சந்ததிகளின் சுகமான, சுபீட்ஷமான சந்தோஷமான, சுதந்திரமான வாழ்க்கைக்காக இன்றே நம் பிள்ளைச் செல்வங்களை தயார் படுத்துவோம். அல்லாஹ் நம் முயற்சிகளை இலகுப்படுத்தி மகத்தான வெற்றியும் தருவானாக. ஆமீன்.. 

இன்ஷா அல்லாஹ்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini