அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

மாநபியின் விண்ணுலகப்பயணம்!


(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.
ஸம் ஸம் நீரால் கழுவப்பட்ட இதயம்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது.
பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 
முதல் வானத்தில்:
'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
இரண்டாவது வானத்தில்:
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். 
மூன்றாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
நான்காவது வானத்தில்:
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
ஐந்தாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
ஆறாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஏழாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
''அல் பைத்துல் மஃமூர்''
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார்.
''சித்ரத்துல் முன்தஹா''
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
ஐந்து வேலைத்தொழுகை கடமையாக்கப்பட்டது
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. (நூல்: புகாரி, எண் 3207)
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். (நூல்: முஸ்லிம்) 
இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்:
ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை (வானவர்களை) அல்லாஹ் நியமித்துள்ளான்.
அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
அல்-பைத்துல் மஃமூர் (பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்) வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
ஒரு முறை தொழும் வானவர் 70,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்:
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரையின் பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.  
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரி, எண் 3241) 
படிப்பினைகள்:
எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி, எண் 304)
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861)
படிப்பினைகள :
புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும். (நூல்: புகாரி, எண் 7048)
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர்.
அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

சூனியமா...?


பில்லி சூனியம் உண்டு என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் அழுத்தமாக இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு-அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது-என்ற ஹதீஸ்கள் மற்றும் விளக்கவுரைகள் வழியாக வரும் செய்திகளேயாகும்.

ஆழ்ந்த திறனாய்வு செய்து - எதையும் குர்ஆனுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் நபி(ஸல்) அவர்கள் பற்றி வரும் செய்திகளை முன்னிருத்தியே தமது சூனியம் பற்றிய நம்பிக்கையை அழுத்தமாக்கிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவுகளைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மிக சில அறிஞர்களே இது குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டுள்ளார்கள்.

எனவே இதுபற்றி ஒரு தெளிவான விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திடம் கொண்டுப்போக கடமைப்பட்டுள்ளோம்.

சூனியம் உண்டா..இல்லையா என்பது பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை. இறைத்தூதருக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பலாமா..என்பது மட்டுமே ஆய்வின் நோக்கம்..

இந்தப் பிரச்சனையை நாம் அலச துவங்கும் போது முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். செய்தி வழியாக வரும் தகவல்கள் மட்டுமே இந்த நம்பிக்கையை முஸ்லிம்களிடம் விதைத்துள்ளது. தலைமுறைகளை கடந்து வரக்கூடிய செய்திகளாக இருந்தாலும் அதை பரிசீலிக்கும் உரைக்கல்லாக குர்ஆன் நம்மிடம் உள்ளது.

தீய விளைவுகளை - இறை நம்பிக்கையில் பலவீனங்களை - முரண்பாடுகளை சொல்லும் எந்த செய்தியையும் முதலில் குர்ஆனில்தான் உரசிப் பார்க்க வேண்டும்.. அடுத்தக்கட்டமாக தான் ஆட்களை பற்றிய ஆய்வை மேற்கொண்டு செய்திகளை - அதாவது ஹதீஸ்களை - தரம் பிரிக்கலாம். இஸ்லாத்தை விளங்கும் எல்லா விஷயங்களுக்கும் இதைத்தான் பொது அடிப்படையாக கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது சம்பந்தமாக குர்ஆனில் நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஒரு சின்னஞ்சிறிய அறிவிப்புக்கூட இல்லை. மாறாக மறுக்கும் வசனங்கள் உள்ளன. அதை பார்க்குமுன் நபி -ஸல்- அவர்களின் நிலைப்பற்றி நாம் ஒரு தெளிவான முடிவுக்கு -ஆதாரங்களின் அடிப்படையில்- வரவேண்டும். கரு உருவானது - பிறந்தது - வளர்ந்தது- பசி - உறக்கம் - தாகம் - இயற்கைத் தேவைகள்- உடல் சார்ந்த உணர்வுகள் இது எல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்றுதான் நபி -ஸல்- அவர்களுக்கும் இருந்தது.

'(நபியே) நீர் கூறும் நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே..' (அல்குர்ஆன்-18:110) 

இந்த வசனத்திலிருந்து நாம் மேலே சொன்ன கருத்து தெளிவாகிறது. எல்லா மனிதர்களையும் போன்ற இயல்புடையவர்களாக நபி -ஸல்- இருந்தாலும் ஒரு விஷயத்தில் எவரும் நெருங்க முடியாத சிகரத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள் அதுதான் இறைத்தூதர் என்ற முத்திரையான பொறுப்பு. தன் பொறுப்பைப்பற்றி அதே வசனத்தில் விளக்க சொல்கிறான் இறைவன்.

'உங்களுடைய நாயன் ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது..' (அல் குர்ஆன்--18:110)

இறைத்தூதர் என்ற பொறுப்பை ஏற்ற பிறகு சராசரியான மனித சிந்தனா ஓட்டத்திலிருந்து பெரும் வேறுபாட்டை சந்தித்தார்கள் முஹம்மத் -ஸல்- அவர்கள். அவர்களின் உடல் சார்ந்த இயக்கம் சராசரியான மனித தன்மையுடன் ஒத்திருந்தாலும் பல நேரங்களில் பலவீனப்பட்டுப் போனாலும் இறை செய்தியின் தொடர்புடன் இருந்த அவர்களின் சிந்தனை சக்தி பலவீனத்தின் வாடையைக்கூட நுகராமல் பெரும் புரட்சி செய்து கொண்டிருந்தது. இந்த புரட்சியால் ஏற்படத் துவங்கிய சமூக மாற்றங்கள் எதிர்ப்பாளர்களை நிலை குலைய வைத்தது.

முஹம்மதால் ஏற்படும் இந்த சமூக மாற்றத்தை (எதிரிகளின் வார்த்தையில் சொல்வதானால் சமூக சீரழிவை) தடுப்பதற்கு எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி வேலைகளில் நபி -ஸல்-உடல் ரீதியாக சில துன்பங்களுக்கு இலக்காக்கப்பட்டார்கள். எதிரிகளின் எத்தகைய திட்டங்களும் நபி -ஸல்- அவர்களின் இறைப்பணியில் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை -செய்ய முடியவில்லை.

இதற்கு காரணம் இருக்கவே செய்கிறது.

'(நபியே) நிச்சயமாக நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர்..' (அல் குர்ஆன்.52:48) 


தூதுத்துவ பணி முஹம்மத் -ஸல்- மீது சுமத்தப்பட்டது முதல் அவர்கள் இறைவனின் நேரடி கண்காணிப்பில் இணைந்து விட்டார்கள். இதன் அர்த்தம், எந்த பணியிலிருந்து நபி -ஸல்- அவர்களை திருப்பிவிட வேண்டும் என்று எதிரிகள் திட்டம் தீட்டினார்களோ அந்த திட்டங்களில் எதுவும் பலனளிக்கப் போவதில்லை காரணம் இறைவனின் நேரடி கண்காணிப்பு.
இப்போது சிந்திப்போம்,

மதீனாவில் வாழ்ந்த லபீத் பின் அஸ்லம் என்ற யூதன் நபி -ஸல்- அவர்களுக்கு சூனியம் செய்ததாக சில ஹதீஸ்கள்-சில விரிவுரைகள் கூறுகின்றன. யூதர்களின் தில்லுமுல்லுகள் திருக்குர்ஆன் மூலம் தோலுரித்துக் காட்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத யூத சக்தி இப்படி ஒரு திட்டத்தை நம்பி செய்திருக்கலாம். இதன் மூலம் நபி -ஸல்- அவர்களின் சிந்தனை ஓட்டத்தை, செய்தி வெளிபாடுகளை தடுக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். இப்படி நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இது நபி -ஸல்- அவர்களிடம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்க முடியாது ஏனெனில் சிந்தனை ரீதியில் அவர்களின் பணியில் எத்தகைய இடையூறும் ஏற்படாத வண்ணம் இறைவன் அவர்களை கண்காணித்து வந்துள்ளான்.

ஹதீஸ்கள் கூறுவது போன்று நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டு நடக்காததை நடந்ததாகவும், செய்யாததை செய்ததாகவும் சொன்னார்கள் என்பது உண்மையானால் அந்த நேரங்களில் இறைவனின் கண்காணிப்பு தளர்த்தப்பட்டு சிந்தனை ஓட்டத்தில் ஷைத்தானின் இடையூறு ஏற்பட்டு விட்டது என்று பொருள்படும். எந்த நேரமும் இறை செய்தியின் வெளிப்பாட்டை எதிர்பார்த்திருந்த நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டது என்று நம்புவது அவர்கள் கொண்டுவந்த வஹியில் கூட சந்தேகத்தை ஏற்படுத்தி விடலாம்.

செய்யாததை செய்ததாக - நடக்காததை நடந்ததாக சொல்லும் நிலை இறைத்தூதருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த நேரங்களின் மனக்குழப்பத்திலிருந்து வஹியை பிரித்தறிவித்திருக்க முடியாது. ஏனெனில் குழப்பத்திற்கு ஆட்பட்ட இதயம் - ஆட்படாத இதயம் என்று இறைவன் எந்த மனிதருக்கும்--நபிமார்கள் உட்பட--ஏற்படுத்தவில்லை

'எந்த மனிதருக்குள்ளேயும் இறைவன் இரண்டு இதயங்களை ஏற்படுத்தவில்லை..' (அல் குர்ஆன்,33:4) 

இதிலிருந்து நபி-ஸல்-அவர்களுக்கு துளியும் சூனிய தாக்கம் நிகழவில்லை என்பதை விளங்கலாம்.

நாம் இந்த சூனியக்கதையை மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

நபி -ஸல்- அவர்களின் தூதுத்துவத்தை உலகம் முழுவதுக்குமாக மிக விரிந்த நிலையில் இறைவன் ஏற்படுத்தினான்.

நாடு-இனம்-மொழி-எல்லாவற்றையும் கடந்துப் போகக்கூடிய சத்திய அழைப்பும்--சத்திய அழைப்பாளரும் மிக எச்சரிக்கை உணர்வோடு செயலாற்றி இருக்க வேண்டும். உலகம் முழுமைக்கும் இனி வரும் காலாகாலத்திற்கும் இந்த அழைப்பும்-அந்த அழைப்பாளரும் தான் வழிகாட்டிகள் என்று பிரகடனப் படுத்தும்போது அது எத்துனை புனிதத்துவம் வாய்ந்த பிரகடனம் என்பதை கண்டு மெய் சிலிர்க்கலாம். இப்படிப்பட்ட அழைப்பையும் அழைப்பாளரையும் ஒப்பு நோக்கும் போது அழைப்பில் குழப்பம் ஏற்படவில்லை ஆனால் அழைப்பாளரிடம் சூனியத்தால் குழப்பம் ஏற்பட்டது என்று கூறினால் அதை எந்த அறிவாளியால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு மன குழப்பம் ஏற்பட்ட நேரங்களில் பிறருக்கு - சமூகத்திற்கு பயன்படும் எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் அவரை சாட்சியாளராக கொண்டு வர மாட்டோம். திருமணத்திற்குரிய சாட்சி, கொடுக்கல் வாங்களுக்குரிய சாட்சி, சமூக நல திட்டங்களுக்கான சாட்சி எதிலும் அவர் இடம்பெற மாட்டார். ஏனெனில் அவர் அந்த சந்தர்ப்பங்களில் மன குழப்பக்காரர்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மிக,மிக சாதாரண விஷயங்களுக்குக் கூட மனக் குழப்பக்காரர் சாட்சியாளராக மாட்டார் எனும் போது மொத்த உலகுக்கும் வழி காட்டி என்று சொல்லப்பட்டவருக்கு மன குழப்பம் ஏற்பட்டால் அவரை எப்படி சாட்சியாளராக்க முடியும்?.

'(நபியே) நாம் உம்மை சாட்சியாளராகவும்............ஆக்கி இருக்கிறோம்.' (அல் குர்ஆன்,33:45-48:8)

இறைவனால் சாட்சியாளராக ஆக்கப்பட்ட ஒருவருக்கு சூனியத்தால் மன குழப்பம் ஏற்படுமா...?

நாம் மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

சூனிய நிவாரணத்துக்கு இறக்கப்பட்டதாக கருதப்படும் சூராக்களின் கருத்துரைகள் மற்றும் வரலாறு.

நபி-ஸல்- அவர்களுக்கு சூனிய நிவாரணியாக சூரத்துந்நாஸ்-சூரத்துல் ஃபலக் ஆகிய இரண்டு அத்தியாயங்கள் மதீனாவில் இறங்கியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலோர் இவை மக்காவில் இறங்கியதாகவே கருதுகிறார்கள். சூனியத்திற்காக இவை இறங்கியதென்றால் அதன் வரலாறு சந்தேகமற தெளிவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. மாறாக வரலாற்றிலும் சூனியநிலை-குழப்ப நிலையே உள்ளது. இதையும் கவனத்தில் வைப்போம்.

-முஅவ்விதைன்- என்று போற்றப்படக் கூடிய அந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துரைகள் கூட சூனியம் பற்றி தெளிவாக பேசவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

1) நீர் கூறும், மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

2) அவனே மனிதர்களின் அரசன்

3) அவனே மனிதர்களின் நாயன்

4) பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்பு வேண்டுகிறேன்)

5)அவன் மனித உள்ளங்களில் தேவையில்லாத சந்தேகங்களை போடுகிறான்

6)(இத்தகய சதிகாரர்கள்)மனிதர்களிலும்-ஜின்களிலும் உள்ளனர். (அல் குர்ஆன்,114 வது அத்தியாயம்)

7)நீர் கூறும் அதி காலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்

8)அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்

9)இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்

10)முடுச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்

11)பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் (இறைவா உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) 


பதினோரு வசனங்களைக் கொண்ட இந்த இரு அத்தியாயங்களில் எங்காவது சூனியம் பற்றி பேசியுள்ளதா..? எங்குமே இல்லை.

10வது வசனத்தில் முடுச்சுகளில் ஊதுவது சூனியம் பற்றியது தானே..என்று எவராவது எண்ணலாம். எனவே அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

உண்மையில் 10 வது வசனம் சூனியம் பற்றி பேசுவதாக இருந்தால்-நபி-ஸல்- அவர்களுக்கு சூனியம் செய்தவன் ஆண் என்று செய்திகளில் கூறப்படுவதால்-இறைவன் ஆண்பாலிலேயே அதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். மாறாக முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். யாருடைய சதிக்கு எதிராக இறை வசனம் இறங்குகிறதோ அவர்களை முன்னிலைப் படுத்தியே இறைவசனம் பேசும்.(அபுலஹப்-பிர்அவ்ன் போன்றவர்களை அடையாளங்காட்டும் வசனங்களை இதற்கு உதாரணமாக்கலாம்)

மனங்களை தடுமாறச் செய்யும் சூனியம் பற்றி இந்த வசனம் பேசினால் அந்த பெரும் கெடுதியாளனை (அதாவது ஆண்பாலில்) சுட்டி இருக்கும் வசனம். அப்படி இல்லாமல் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று இறைவன் கூறுவதால் வேறு ஏதோ அதில் உள்ளது என்பதை புரியலாம்.

இதை விளங்கவோ-புரியவோ பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.

குடும்பங்கள் பிளவுபட்டு, சொந்த பந்தங்கள் பிரிந்து, மன குழப்பங்கள் - சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு பெண்களின் குசு-குசு பேச்சே அதிக பங்கு வகிக்கின்றது. தலையணை மந்திரம்- முந்தானை முடுச்சு என்றெல்லாம் இந்த பேச்சுக்களுக்கு புனைப் பெயர் உண்டு. இந்த சிக்கல் பெண்களின் தரப்பிலிருந்து வருவதால் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதால் சமாதான வாழ்வை விரும்புவோர் இதிலிருந்து கட்டாயம் பாதுகாப்புத் தேட வேண்டும்.

பெண்களிடம் இருக்கும் அந்த இயல்புக்குரிய வார்த்தையை தான் இறைவன் இங்கு பயன் படுத்தியுள்ளான்.

10 வது வசனமில்லாமல் வேற எந்த வசனமும் சூனியம் பற்றி பேசவில்லை. 10வது வசனமும் இதைப்பற்றி பேசவில்லை என்பதை இப்போது விளங்கி இருக்கலாம்.

எனவே பொதுவாக எல்லா கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்பு தேடும் முகமாகவே இந்த அத்தியாயங்கள் இறக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்துக் கொள்ளலாம். குர்ஆனில் பரவலாக பிரார்த்தனைகள் இடம் பெறுகின்றன. அதே அடிப்படையில் தனி பிரார்த்தனைகளாக இல்லாமல் பிரார்த்தனைக்குரிய அத்தியாயங்களாகவே இவை அமைந்துள்ளன. மாறாக சூனியத்திற்காக இறக்கப்படவில்லை.

நாம் மறுப்பதற்குிய அடுத்தக்காரணம்:
சூரத்துல் ஃபுர்கான் 25 வது அத்தியாயத்தின் 8-9 வது வசனங்கள்.

'சூனியம் செய்யப்பட்ட ஓரு மனிதரையேயன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள் (25:8) 

நபி-ஸல்- அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை நோக்கி சூனியம் செய்யப் பட்டவரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது.

இதற்கு இறைவனின் பதில் என்ன..?

'(நபியே) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை கூறுகிறார்கள் என்று பாரும். அவர்கள் வழி கெட்டுப்போய் விட்டார்கள். நல் வழியை காண சக்தி பெற மாட்டார்கள்.' (25:9)

நபி-ஸல்- அவர்களுக்கு செய்யப்படாத- தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு பொய்யை எதிரிகள் உதாரணமாக்கியதை இறைவன் எடுத்துக்காட்டி அவர்களை வழி கேடர்கள் அநியாயக்காரர்கள் என்கிறான். 'நபியே நீர் கவனியும்' என்று நேரடியாக நபியை தூண்டுவதிலிருந்தே இது பற்றிய எல்லாமும் கதை தான் என்பது தெளிவாகிறது.

நபி-ஸல்- அவர்களுக்கு கவிதை பற்றித் தெரியாது. ஆனாலும் எதிரிகள் கவிஞர் என்று பெயர் சூட்டினார்கள். அதேபோன்றுதான் சூனியம் எதுவும் தீண்டாமல் இருக்கும் போதே சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகளால் பெயர் சூட்டப்பட்டார்கள். அந்த பொய்யுடைய தாக்கம் தான் சில ஹதீஸ்களிலும் விரிவுரைகளிலும் காணப்படுகின்றன.
நபி-ஸல்- அவர்களின் தூதுத்துவத்தில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தும் இந்த பொய்களை புறக்கணிப்பதே அறிவுடமையாகும். (இறைவன் மிக்க அறிந்தவன்) இதை படிக்கும் வாசகர்களுக்கு, இதுபற்றிய எத்தகைய விமர்சனங்களையும் எண்ணங்களையும் கருத்துக்களையும் நீங்கள் எழுதலாம். நிறை இருப்பின் ஏற்போம் தவறு இருப்பின் திருந்துவோம் அல்லது திருத்துவோம்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள் ? !



புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,
மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!
போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.
அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!
பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?
விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!
வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பாவங்களை மன்னிப்பவன் !


நாம் முஸ்லிம்களாக பிறந்தும் அதன் அருமைப் பெருமையை உணராமல் வாழ்ந்து இருக்கிறோம். கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளோ மிக அதிகம். பொன்னான நேரத்தை வீணாக்கினோம். மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தோம். அல்லாஹ்வை மறந்து ஷைத்தானின் அடிச்சுவடியைப் பின்பற்றினோம்.
ஆனால் இன்று நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம் இன்னும் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறோம். ஆனால் இவைகளை ஒருகாலத்தில் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாம் இன்று திருந்தி வாழ்ந்தாலும் ஏனோ நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்த்தால் உள்ளம் நடுங்குகிறது. எப்படி எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து விட்டது. இப்படி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காமலிருந்தால் நல்லாயிருக்குமே. ஆனால் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.
இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா? மன்னிக்கமாட்டானா? மன்னித்து நம்மை சுவர்க்கத்தில் நுழையவைப்பானா? அல்லது நரகில் தள்ளுவானா? போன்ற கவலைகள் நம் உள்ளத்தில் தேங்கியுள்ளது. நம்மில் எழும் இக்கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு பதில் கூறுகிறான்.
7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அன்றைய அரபு மக்கள் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். என்பதை யாவரும் அறிவர். கொலை கொள்ளை, குடி, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களையும் செய்தும் வந்தனர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருந்தி உண்மையான இஸ்லாத்தின் பக்கம் வந்த பின் அவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும் .
25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
இவ்வசனத்தை அறிந்த அன்றைய அரபு மக்களில் ஒரு சிலர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்குமுன் கொலை கொள்ளை விபச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி வசனப்படி இறையடியாளர்களாக முடியுமா? அதற்கு ஏதும் பரிகாரமுள்ளதா? எங்களூக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்குமா? என வினவினார்கள். அதற்கு பதிலாக அல்லாஹ் அருளிய இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.
39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.
மேலும் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதை அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார். 

நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.
வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்”


வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
 இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.
உதாரணமாக, விவசாயம் செய்கின்ற ஒருவர் தனக்கு சிறந்த முறையில் பயிர் கிடைக்கும் என்று மாத்திரம் இறைவன் பால் தவக்குல் (நம்பிக்கை) வைப்பது தவறாகும் மாறாக, தனக்கு சிறந்த பயிர் கிடைகும் என்ற உருதியான நம்பிக்கையுடன் இறைவன்பால் தவக்குல் வைத்து பொறுப்புச் சாட்டிவிட்டு அதற்குறிய காரணிகளாகிய பயிர் செய்கையை பராமரித்த்ல், சீர் படுத்தல், நீர்ப் பாய்ச்சல், கிருமிநாசிக்குரிய மருந்தடித்தல் இன்னும் பல காரணிகளை செய்வதன் மூலமே இறுதியில் சிறந்த விளைச்சல் அவனுக்கு கிட்டும். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்ற ஒருவன் ஏனய விஷயங்களையும் இது போன்றே மேற்கொள்ள வேண்டும். தவக்குலை பற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)
“நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” (08:64)
“எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (25:58)
“எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அனைத்துமே இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக தெளிவு படுத்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இறைவனை முழுக்க முழுக்க நம்பியிருந்தாலும் தான் வைத்திருந்த அந்த நம்பிக்கையை இறைவன்பால் பொறுப்புச் சாட்டி இருந்தாலும் அதற்குறிய காரணிகளை இனங்கண்டு அவற்றை செய்து வந்தார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது தன்னை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட இணைவைப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குறிய காரணிகளை இனங்கண்டு செயல்படுதினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து மதீனவுக்கு செல்லக்கூடிய திசை வடக்கு பக்கமாகும்.
ஆனாலும் இணைவைப்பாளர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு யூதனை பாலைவன வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்திக் கொண்டு, செல்ல வேண்டிய திசையை மாற்றி தெற்கு திசையாக மதீனாவை சென்றடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏன் தெற்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும்? யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும்? இவை அனைத்தும் நாம் இறைவனை சார்ந்து இருப்பதுடன் சார்ந்திருக்கும் செயலில் வெற்றிக்குரிய காரணிகளை இனம்கண்டு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகின்றது.
இதே போன்று தான் ஏனய விஷயங்களுக்கும் உதாரணமாகும். இவ்வாறு சிறந்த முறையில் இறைவனை சார்ந்திருந்து நமது காரியங்களுக்குரிய காராணிகளை இனம் கண்டு செயல்படுத்தினால் நிச்சயாமாக அல்லாஹ் நமக்கு அவற்றை எளிதாக்குவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)
ஒரு உடம்புக்கு எவ்வாறு தலை அவசியமோ அதே போன்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கின்ற ஒருவனுக்கு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். தவக்குல் மிகப் பெரிய வணக்கங்களில் ஒன்றாகும். இதனாலேயே ஏனைய மார்க்கத்தை ஏற்றிருப்பவர்களை விடவும் முஸ்லிம்களை அல்லாஹ் பிரித்து காட்டுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கவில்லையோ அவன் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வுடன் சேர்த்து இன்னொருவரை தவக்குல் வைக்கின்றானோ அவன் இணைவைப்பாளனாக மாறுகின்றான். எவரொருவர் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் வைத்து அவனையே சார்ந்து இருக்கின்றாரோ அவன் ஏகத்துவவாதியாவான். அவனையே அல்லாஹ் விரும்புகின்றான்; பொருந்திக் கொள்கின்றான். ஏனெனில் இஸ்லாதின் அடிப்படை வணக்க வழிமுறையை அவன் செயல் படுத்துபவனாவான்.
தவக்குலில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அவைகளாவன:
  1. அல்லாஹ்வின் மீது மாத்திரமே தவக்குல் வைத்தல்.
  2. தவக்குல் வைத்த விஷயத்தின் கரணியை இனம் கண்டு செயல்படுத்தல்..
இதனடிப்படையில் இறைவன் மீது மாத்திரமே தவக்குல் வைக்க வேண்டும். ஒருவன் ஒரு காரியத்தை செய்கின்ற போது அல்லாஹ் அல்லாதவர்களை நம்பிக்கை வைத்து அவர்களையே சார்ந்து இருந்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாக மாறிவிடுகின்றான்.
ஜாஹிலியா கால அரேபியர்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது தங்களது தேவைகளை பொறுப்புச் சாட்டினார்கள்; நம்பிக்கை வைத்திருந்தார்கள். சிலைகளிடத்திலும், கற்களிடத்திலும், மரங்களிடத்திலும் தங்களது தேவைகளை முறைப்பாடு செய்தார்கள். அவற்றையே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் என்றும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நன்மைகளை நிறைவேற்றித்தரும் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இன்னும் சிலர் அவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பியிருந்தார்கள். அவைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். இதனாலேயே இவர்கள் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.
இதே போன்றூதான் தற்காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்லியாக்களையும் தங்கள்மார்களையும், ஷேக்மார்களையும் முழுமையாக நம்பிக்கை வைத்து அவர்கள் தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். அல்லது ஒரு நோயை, தீமையை நிறைவேற்றுவதற்காக இஸும் அஸ்மாக்களையும், தாயத்தையும், மந்திரத்தையும், குறிபார்பவரையும் தேடி தங்களது காரியங்களை அவற்றில் முழுமையாக பொறுப்புச் சாட்டி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அல்லது இவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பிக்கை வைப்பதன் மீலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இதனாலேயே அல்லாஹ் இறைவிசுவாசிக்கு நிபந்தனையாக தவக்குல் வைப்பதை சுட்டிக் காட்டி அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குல் வைத்தால் தான் உண்மையான இறைவிசுவாசி என்பதனை திட்டவட்டமாக தனது இறைவாக்கில் உறுதிப்படுத்துகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (5:23)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer




Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பெற்றோர்களே

அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் இப்பெரும் பாக்கியமான நம் குழந்தைச் செல்வங்களை திறமையாய் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் ஏன்வளர்க்கக்கூடாது..? சீர்திருத்தங்களைப்பற்றி சிந்திக்கக்கூடாதா..? செயல் படுத்த இன்னும் எதற்கு தாமதம்..?

 நம் குழந்தைகளை சுயமாய் சிந்திக்கும் திட்டங்களை வகுக்கும் செயலாற்றும் சமூகமாய் நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.

இதற்கு அடிப்படையாய் ஆரோக்கியம், கல்வி, நற்சூழ்நிலை குழந்தைகளை சென்று அடைய வேண்டும்.

ஆரோக்கியம் : சிசுக்களின் முதலாவதும், மிகப்பிரதானமான உணவாக இருப்பது தாய்ப்பால் தான். நாகரிகங்களை விரும்பும் சில தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. கேட்டால் கவர்ச்சி போய் விடும் என்பது போன்ற பல காரணங்களை சொல்வார்கள். தாய்ப்பால் இறைவன் கொடுத்த ஒரு அருட் தான். அதனை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருந்தால் பல நோய்களை தாய்மார்கள் அடைவார்கள். தாய்ப்பாலை பிள்ளைகளுக்கு கொடுத்தால் பிள்ளைகளும் சரியே, தாயும் சரியே பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பதும் உண்மை தான். தாய்ப்பாலை விட அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எதுவுமே கிடையாது. தாய்மார்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது,

தங்களுடைய குழந்தைகளுக்கு தம் மனைவிகளைக் கொண்டே பால் ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள் வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள்.(அல்குர்ஆன் 2:233)

தாய்ப்பால் பிள்ளைக்கும் தாய்க்குமிடையில் அன்பையும், பாசப்பிணைப்பையும், நெருக்கமான உறவையும், நேசத்தையும் அதிகப்படுத்தும் அச்சாணியாய் அமைவது என்பதை தாய்மார்களே.. மறந்திட வேண்டாம்.

மேலும், தம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான சிறந்த உணவுகளும், பழ வகைகளும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கால நிலைகளிலும் கிடைக்கும் பற்பழங்கள் உடல் சமநிலை பேண உதவும்.

மனிதனுக்கு மனிதன் உடல் நிலையில் மாறுபாடு உண்டு. எனவே எந்த எந்த உணவு தம் பிள்ளையின் உடல் நிலைக்கு உகந்தது, எந்த உணவுகள் ஒவ்வாமை (அஜீரணிக்கக்கூடியது) என்பதையும், பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவுகள் எது என்பதையும் பெற்றோரே அறிவார்கள். அதிலும் தந்தைமார்களை விட தாய்மார்களே நன்கறிவார்கள். எனவே நாம் சமைக்கும் உணவானாலும், கடைகளில் வாங்கும் உணவானாலும் தன் குழந்தைக்கு எந்தளவுக்கு ஊட்டத்தையும், அதிக சக்தியையும் வழங்கும் என்பதினை அறிய வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் இருக்க வேண்டும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு எந்தளவுக்கு பங்களிப்பு செய்யும் என்பதையும் பெற்றோர்கள் தெளிவாய் அறிந்திருப்பது அவசியம்.

இன்று, நாம் பார்க்கிறோம் சில மாணவர்கள் மாதத்தில் பாதி நாட்கள் பாடசாலைக்கு வருவதில்லை. காரணம் தொடர்ந்து நோய் வருவதே.. சில நேரம் கெட்டித்தனமாய், ஆர்வமாய் படிக்கும் மாணவர்களும் நோயால் பாதிக்கப்படுவது தான் சோகம். இதற்கு அடிப்படைக்காரணம் குழந்தைப்பருவத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளே. குழந்தைகளில் உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் பெற்றோர்களே.. ஏனெனில் நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளால் தான் நன்கு சிந்திக்கவும், செயல்படவும், கிரகிக்கவும் செயல்படவும் முடியும்.

கல்வி : ஒரு குழந்தையின் முதலாவது பள்ளிக்கூடம் வீடு தான். அங்கு பெற்றோரும், வீட்டிலுள்ள அனைவரும் ஆசிரியர்களே. வளரும் பயிர் முளையிலே தெரியும்.. அந்த வித்தை, முளையை இனம் கண்டு செழித்து வளர உரமாய்.. உந்து சக்தியாய்.. இருப்பவர்களே இந்த வீட்டு ஆசிரியர்கள்.

கல்வியில் சிறந்த கல்வி நல்லொழுக்கம் தான். முதியோரை மதித்தல், பகிரிந்தளித்தல், பொறுமை, நீதியாய் நடத்தல், நல்ல வார்த்தைகளை மட்டும் பேசுதல் இது போன்ற நல்ல பழக்கங்களையும், பொறாமை, கோள், அவதூறு, மோசடி செய்தல், திருடுதல் போன்ற தீய செயல்களை தவிர்ந்து நடக்கவும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

எல்லாத்தீய பழக்கங்களுக்கும் முதுகெலும்பாய் உள்ளது பொய் தான். எனவே தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், விளையாட்டுகாகவேணும் பொய்யை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என நவின்றுள்ளார்கள்.ஆதாரம் : அபூ தாவூத்

மேலும் கூறியுள்ளார்கள்..

யாரேனும் ஒரு குழந்தையிடம்.. வா.. இதோ வாங்கிக்கொள்.. என்று கூறி பிறகு அதைக் கொடுக்கவில்லையெனில் அதுவும் பொய்யே ஆகும்.அறிவிப்பாளார் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - அஹ்மத்

பிள்ளைகளை பொய் பேசுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். பொய் பேசினால் அதன் அர்த்தம் தவறோ, அநீதியோ, துரோகமோ செய்கிறார்கள் என்பதே பொருள்.

இஸ்லாம் நல்ல பழக்க வழக்கங்களை நமக்கு தெளிவாய் கற்றுத்தந்து இருக்கிறது. நகம் வெட்டுதல், பல்துலக்குதல், மலஜலம் கழித்தல், குளித்தல் என முழு வாழ்க்கைத்திட்டமாய் பரந்து விரிந்திருக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் துஆக்களையும் கற்றுத்தர தவறவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சுன்னத்தான துஆக்களை கண்டிப்பாய் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும். பெற்றோர்களும் துஆக்களை படித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொடுத்து கொண்டே இருக்க முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படும் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வஇலைஹின் னுஷுர்.

பொருள் : நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக..! ஃபத்ஹுடன் புகாரீ. பாகம் 11. பக்கம் 113. முஸ்லிம். பாகம் 4. பக்கம் 2083.

கழிவறையில் நுழையும் போது துஆ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாயிஸி

பொருள் : யா அல்லாஹ்.. ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

குஃப்ரானக.

பொருள்: உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள் : திர்மிதீ. அபூதாவூது. இப்னுமாஜா

வீட்டிலிருந்து புறப்படும் போது

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல லா குவ்வத இல்லா பில்லாஹி.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும் அல்லாஹ்வைக்கொண்டல்லாது (பாவத்திலிருந்து திரும்புதலும், நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை. திர்மிதீ 5,490 அபூதாவூது 4,325

வீட்டினுள் நுழையும் போது துஆ

பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மிலாஹி கரஜ்னத, வஅலா ரப்பினா தவக்கல்னா.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

இது போல் இன்னும் பல துஆக்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் பெற்றோர்கள் முதலில் தெரிந்துக்கொண்டு அதனை சிறார்களுக்கு சொல்லி பழக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள துஆக்கள் சில உதாரணம் தான்.

சில பெற்றோர்கள் நாகரீகம் என்ற பெயரில் மோசமான மற்றும் இஸ்லாம் அங்கீகரிக்காத தீய பழக்க வழக்கங்களை தன் பிள்ளைகளுக்கு அவர்கள் பழக்குகிறார்கள். அல்லது அவர்கள் இத்தகைய செயல்களை செய்வதை விட்டும் தடை செய்வதும் இல்லை. திக்ரு மற்றும் துஆக்களை கற்றுக்கொடுப்பதை விட்டும் அவர்கள் பராமுகமாக இருப்பதால் பிள்ளைகள் தொலைக்காட்சியில் மற்றும் திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்ன பஞ்ச் வசனங்களை சொல்கிறார்களோ அதனை அவர்களும் சொல்கிறார்கள். மற்றும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப என்ன திரைப்பட பாடல் பிடித்து இருக்கிறோதோ அந்த திரைப்படத்தினை பாடல் வரிகளை ஒன்று விடாமலும் மற்றும் மறக்காமலும் அடி பிறழாமல் பாடி வருகிறார்கள், விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் என் மகன்.. இந்த பாட்டை நல்ல பாடுவான்.. அந்த பாட்டை நல்லா.. பாடுவான் என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மிஞ்சுவார்கள்.

கெட்ட சினிமா பாடல்களினால் சிறார்கள் உடல், மனம், சிந்தனையானது பிழையான மற்றும் தவறான எண்ணங்களை தேடிக்கொள்கிறது. சில பெற்றோர்கள் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய பிள்ளைகளும் தாய் தகப்பன் என்ன வழியோ அந்த வழியினை பின் தொடர்கிறார்கள். பிள்ளைகளுக்கு தெரியாது.. நல்லது எது.. கெட்டது எது என்று. நாம் தான் அவர்களை நல் வழிப்படுத்தி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது தப்பில்லை, ஆனால்.. அதில் உள்ள தரமான நிகழ்ச்சிகளை கல்விக்கும் எதிர்காலத்துக்கும் உதவக்கூடிய நிகழ்ச்சிகளை இனங்கண்டு அவைகளின் நேரங்களை அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பது குற்றமில்லை. பிள்ளைகளின் பெறுமதியான ரேநங்களையும், பாடசாலையின் வீட்டு வேலைகளையும், உடல் ஆராக்கியங்களை தரக்கூடிய விளையாட்டுக்களையும் சிதைப்பது இந்த தொல்லைக்காட்சி தான். தொலைக்காட்சியில் வீணடிக்கும் நேரங்களை திருக்குர்ஆனை ஓதவும், மனம் செய்யவும் பழங்குங்கள். எனவே நம் பிள்ளைகளுக்கு தினமும் நல்ல பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் மனிதன் முழு மனிதனாவான். அத்துடன் கைப்பணிப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியையும் கற்றுக்கொடுங்கள் இதனால் புதிய கண்டு பிடிப்புகளுக்கும், சுயமாய் சிந்திக்கும் ஆற்றலுக்கும் இப்படியான முயற்சிகள் வித்திடுவதோடு சுய தொழில்களை கற்றுக்கொள்ளவும் அடிப்படையாய் அமையும்.

தற்போதைய கல்வித்திட்டங்களை எடுத்துப்பார்த்தால் நம் பெற்றோருக்கும் நமக்கும் உள்ள கல்வித்திட்டங்களுக்கு இடையில் சிறிய வித்தியாசம் உண்டு. நமக்கும் நம் பிள்ளைகளின் கல்வித்திட்டங்களுக்கு இடையில் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தற்போதைய கல்வித்திட்டங்களில் புதிய கண்டுபிடிப்புகள், அதியுயர் தொழில் நுட்பம், நவீன விஞ்ஞானம், மருத்துவம் என அதிசயத்தக்க பிரமிக்கக்கூடிய பல பரிமானங்களை அடைந்துள்ளது.

தற்போது நாற்பது அல்லது நாற்பதைந்து வயதிலிருக்கும் ஒருவர் 15 அல்லது 20 வயது பூர்த்தி அடைந்தப்பின்னர் தான் கணிணியின் அறிமுகத்தையும் அறிவையும் பெற்றிருப்பார். நம் பிள்ளைகள் அவர்கள் பிறக்கும் போதே நவீன தொழில் நுட்ப சாதனங்களை அறிந்தவர்களாக 20 அல்லது 25 வருடங்கள் முன்னோக்கியவர்களாக பிறக்கிறார்கள். எனவே நம் பிள்ளைகள் நாம் எதிர் கொண்ட சவால்களை விட இவர்களுக்கு நிறைய சவால்களும் போட்டிகளும் பொறுப்புகளும் மிகவும் அதிகம்.

இவ்வுலகத்தின் அதி வேக முன்னேற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்களாக பிள்ளைகளை குழந்தைப்பருவத்திலிருந்தே தயார் படுத்த வேண்டும். எதிர் கால திட்டங்களோடு வளர்க்கப்படும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அறிவாற்றிலும் ஆளுமையிலும் நல்லொழுக்கங்களிலும சிறந்து விளங்குகிறார்கள். எனவே பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடனும், தூர நோக்குடனும் திpட்டமிட்டு செயல்பட வேண்டும்..

ஒரு பிள்ளை கெட்டித்தனமாக நல்ல பிள்ளையாகவும் கெட்ட பழக்கமுள்ள பிள்ளையாகவும் மாறுவது சூழலால்தான். நல்ல சூழலிலுள்ள நல்ல பிள்ளைகளுடனேயே நம் பிள்ளைகளையும் விளையாட விட வேண்டும். சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட விடாமல் எந்த நேரமும் படி படி என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சலும், உடல் சோர்வும், சோம்பேறித்தனமும் தான் உண்டாகும். குறிப்பிட்ட நேரம் பிள்ளைகளை சுதந்திரமாக தாங்களின் கண்காணிப்பில் விளையாட விட வேண்டும். விளையாட்டுகளிலும் நம்முடைய பிள்ளைகளுக்கே தலைமைத்துவ பொறுப்புகளைக் கொடுங்கள். இதனால் பிள்ளையின் ஆளுமையும், செயல் திறனும், சிந்தனை சக்தியும் அதிகரிக்கும். நீங்களும் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்தால் அவர்களைப்பற்றி தெளிவாய், முழுமையாய் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும், வீட்டுக்கு கொண்டு வரும் புதிய பொருட்களைப்பற்றி ஏது..? எங்கிருந்து எப்படி வந்தது என்பதனை பற்றி விசாரிக்க வேண்டும். அதே நேரம் நம் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்களை வெளியே கொண்டு போகிறார்கள் என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள். அவர்களின் திறமைகளை உடனுக்குடன் மனம் திறந்து பாராட்டுகள் புகழுங்கள் முடிந்தால் சின்ன சின்ன பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்வித்து ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் வாக்களித்தால் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். எக்காரணத்திற்காகவும் ஏமாற்றாதீர்கள். அவர்களின் தவறுகளை அன்போடும் பக்குவமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். தவறுகள் அவர்கள் தான் செய்தார்கள் என்று கற்பனை பண்ணி அவர்கள் மீது வீண்பழி சுமத்தி குற்றக்காரனாக சண்டைக்காரனாக ஆக்கி விடாதீர்கள். அதனால் தீய சிந்தனையும் மற்றவர்களை மதிக்காத குணங்களும் வெறுப்பும் விரக்தியும் உண்டாக காரணமாகி விடும். சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் ஏசுவதும் அடிப்பதும் பல பேர் முன் அவமானப்படுத்துவதும் சில பெற்றோர்கள் சர்வசாதாரணம் என நினைத்து அவர்களை புண்படுத்துகிறார்கள். இப்படியான நடவடிக்கைகளை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பு இருக்க வேண்டும்.. தண்டிக்க தான் வேண்டும்.. ஆனால் அதனால் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்காத விதத்தில் செய்த தவறை தெளிவுப்படுத்தி அதனை ஏற்க செய்து உணர்ந்து திருந்தும் வகையில் தண்டிக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர்களிடம் அடி வாங்குவார்கள். என்ன காரணத்திற்காக அடி வாங்கினோம் என்ற உண்மை அவர்களுக்கு தெரியாமலிருக்கும். அடிக்கும் விசயத்தில் நிதானமும் பொறுமையும் அவசியம் இல்லாவிட்டால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தண்டிக்க போய் எதிர் பாராத தாக்கங்களும், மாற்றங்களும், விபரீதங்களும் பிள்ளையின் பிஞ்சு நெஞ்சத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை எனவே பிள்ளைகளின் உள்ளங்களில் நல்ல கருத்துகளை, தூய்மையான எண்ணங்களை, பரந்த மனப்பான்மைகளை விதைத்து விடுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை நல்லொழுக்கங்களை வீட்டில் கற்றுக்கொடுங்கள். இஸ்லாத்தை மனதின் ஆழத்தில் பதிந்து விடுங்கள். கல்வி, விளையாட்டு என சகல துறைகளிலும் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் திகழ உங்களின் வாழ்க்கையினை அர்ப்பணியுங்கள். இன்றைய சிறுவர்களே.. நாளைய தலைவர்கள்.. எதிர் கால சந்ததிகளின் சுகமான, சுபீட்ஷமான சந்தோஷமான, சுதந்திரமான வாழ்க்கைக்காக இன்றே நம் பிள்ளைச் செல்வங்களை தயார் படுத்துவோம். அல்லாஹ் நம் முயற்சிகளை இலகுப்படுத்தி மகத்தான வெற்றியும் தருவானாக. ஆமீன்.. 

இன்ஷா அல்லாஹ்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini