அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

ரகசியம் காப்பது !

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.

    உமர் (ரழி) அவர்கள் தனது விதவை மகளான ஹஃப்ஸா (ரழி) அவர்களை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரிடத்தில் கேட்டுக்கொண்டபோது அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணியது, அவர்கள் ரகசியம் பேணுவதில் எத்தகு சிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்றாகும்.

    அப்துல்லாஹ இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரழி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ''நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். உஸ்மான் (ரழி) ''என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்'' என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரழி) என்னைச் சந்தித்து, ''இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லை'' என்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களை சந்தித்து, ''நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரழி) எதுவும் பதில் கூறாமல் மெளனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரழி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.
    சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்; மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரழி) என்னைச் சந்தித்து, ''நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நான் ''ஆம்'' என்றேன். ''நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவு கூர்ந்ததை நான் அறிந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
    ரகசியம் பேணுவது, நமது முன்னோர்களான ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் இருந்தது.
    அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ''ஏன் தாமதம்?'' என்று என் தாய் கேட்டார். நான், ''நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்'' என்றேன். என் தாயார், ''என்ன வேலை?'' என்று கேட்டார். நான் ''அது ரகசியம்'' என்றேன். தாயார், ''நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே...'' என்று கூறினார்.
    அனஸ் (ரழி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ''ஸாபித்தே! அல்லாஹவின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    அனஸ் (ரழி) அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணுவதில் தனது மகன் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்த்து அதற்கு மதிப்பளிக்கிறார்கள். அவர் யாரிடமும் சொல்லிவிடாதே என்று கூறியதால் அந்த ஹதீஸை அறிவிக்கும் ஸாபித்துல் புனானி (ரஹ்) அவர்களிடமும் கூறவில்லை. அந்தத் தாய் தனது சிறிய மகன் தன்னிடம் மறைக்கும் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதுதான் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சியாகும். அது ஆண், பெண், சிறுவர் என அனைவரையும் உயர்வை நோக்கி இட்டுச் செல்வதற்கான வழிமுறையாகும்.
    ரகசியத்தை வெளியிடுவது மனிதனை பெரிதும் பாதிக்கும் இழிவான செயலாகும். வாழ்வில் தானறிந்த அனைத்தையும் வெளியிடுவது என்பது முறையற்ற செயலாகும். பல விஷயங்களை மறைப்பதில் மனிதனின் ஆண்மை, கம்பீரம், கெளரவம், கண்ணியம் போன்றவை காக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இல்லறம் சம்பந்தமான விஷயங்களில் ரகசியம் பெரிதும் பேணப்பட வேண்டும். அறியாமையும் மூடத்தனமும் நிறைந்த பைத்தியக்காரனே அதை வெளிப்படுத்துவான். அவன் அல்லாஹவிடம் இழி மக்களில் ஒருவனாக கருதப்படுவான்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''மறுமைநாளில் அல்லாஹவிடம் மனிதர்களில் மிகக் கீழ்த்தரமானவன் யாரெனில் அவன் தனது மனைவியை நெருங்குகிறான். அவளும் கணவனுடன் இணைகிறாள். பின்பு அவளது அந்தரங்கத்தை பிறரிடம் வெளிப்படுத்துகிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
    மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசுவது
    மார்க்க சட்டங்களை நன்கறிந்த முஸ்லிம் நுண்ணறிவு மிக்கவராகவும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவும் அவர்களுக்கு தீமை செய்வதிலிருந்து விலகியுமிருப்பார். அவர் உரையாடும் கலையை நன்கறிவார். அதில் சிறந்த பண்பு, மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசாமல் இருப்பதாகும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபரின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.
    உள்ளங்களில் இஸ்லாம் ஊடுருவி, இஸ்லாமியப் பண்புகளும் போதனைகளும் உதிரத்தில் கலந்து நின்ற நபித்தோழர்கள் மக்களோடு பழகும் சூழ்நிலைகளில் அவர்களது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதிலிருந்து எப்போதும் பின்தங்கியதில்லை.
    அவர்களது உன்னதமான சமூக வாழ்க்கையைப் பற்றியும், மனித உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பைப் பற்றியும் அறிவிக்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
    அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.
    இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ''நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்றார்கள். (அல் முவத்தா)
    இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள்.
    பெருமை கொள்ளாதவர்
    உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்

    அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.
    (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான்.  (அல்குர்ஆன் 28 : 83)
    கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ விரும்ப மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 31: 18)
    நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையை ஆராய்ச்சி செய்பவர் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெறிய வேண்டும். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் திகைத்து விடுவார்.
    நபி (ஸல்) அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவருடைய இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் புகமாட்டார்.'' ஒரு மனிதர் கேட்டார், ஒருவர் தனது ஆடைகள், பாதணிகள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். (அது பெருமையடிப்பதாகுமா?) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக எண்ணுவதுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)
    ஹாரிஸா இப்னு வஹப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ''உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.'' (ஸஹீஹுல் புகாரி)
    ஆணவம் கொண்டோரை அல்லாஹ மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ மறுமை நாளில் பார்க்க மாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி)
    மேலும் கூறினார்கள்: ''மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
    ஏனெனில், பெருமை என்பது அல்லாஹவின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹவின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.
    ''கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்'' என அல்லாஹ கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    இதனால்தான் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்த எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
    பணிவுடையவர்
    பெருமையடிப்பவர்களைப் பற்றியும், அவர்கள் மறுமையில் அடையவிருக்கும் இழிவு, வேதனை குறித்த பல சான்றுகள் உள்ளன. அதுபோன்றே பணிவைப் பற்றி ஆர்வமூட்டும் சான்றுகளும் உள்ளன. பணிவுடையவர்கள் அல்லாஹவின் ஏவலை ஏற்று பணியும் போதெல்லாம் அவர்கள் அல்லாஹவிடத்தில் உயர்வும் மேன்மையும் அடைகிறார்கள்.

அதற்கான நபிமொழிகளில் சில:
''எவரேனும் அல்லாஹவிற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ முஸ்லிம்)
    ''பணிவாக இருங்கள். நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அகந்தை கொள்ள வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ எனக்கு வஹீ அறிவித்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை பணிவிலும், அடக்கத்திலும், மென்மையிலும், பரந்த மனப்பான்மையிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டால்கூட அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லி, அவர்களை மகிழ்வூட்டி, புன்னகை புரிவதற்கு அவர்களின் நபி என்ற அந்தஸ்து தடையாக அமையவில்லை.
    அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ''நபி (ஸல்) அவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்களின் பணிவைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ''மதீனாவின் அடிமைப் பெண்களில் ஓர் அடிமைப் பெண் நபி (ஸல்) அவர்களின் கரம்பற்றி தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வாள். நபி (ஸல்) அவர்கள் அவளது தேவையை நிறைவேற்றித் தருவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)
    இஸ்லாமிய சட்டங்களைக் கேட்டறிய தமீம் இப்னு உஸைத் (ரழி) மதீனாவுக்கு வருகிறார். அந்தப் புதியவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரான நபி (ஸல்) அவர்களுக்கும் தனக்குமிடையே தடையாக எவரும் இல்லாமல் மிம்பரில் நின்று நபி (ஸல்) மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே விளக்கம் கேட்கத் துணிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பணிவோடும், அன்போடும் அவரை முன்னோக்கி அவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். அது குறித்து தமீமே கூறுகிறார் கேட்போம்:
''நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களைச் சென்றடைந்தேன். 'அல்லாஹவின் தூதரே! மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த புதிய மனிதர் (நான்)' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் உடனே என் பக்கம் திரும்பினார்கள். தனது பிரசங்கத்தை விட்டுவிட்டு என்னருகே வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன்மீது அமர்ந்தார்கள். அல்லாஹ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு பிரசங்கம் செய்யத் தொடங்கி அதைப் பூர்த்தி செய்தார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு எளிமையும், பெருந்தன்மையும் கூடிய பணிவையும் கற்றுக் கொடுத்தார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஓர் ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதியை விருந்தாக்கி அந்த விருந்துக்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.'' (ஸஹீஹுல் புகாரி)
    என்னே அவர்களது பணிவு...! எளியோரையும் அவர்கள் மதித்த பாங்குதான் என்னே...!
பரிகாசம் செய்யமாட்டார் பணிவை விரும்பவேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறரை கேவலமாகக் கருதுவது, பரிகாசம் செய்வது என்பதெல்லாம் வெகுதூரமான விஷயமாகும். பணிவை விரும்ப வேண்டும், பெருமையடிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் பிறரைப் பரிகாசம் செய்யக் கூடாது, கேவலமாகக் கருதக் கூடாது என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
    விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹவினிடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்). அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறைகூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு (தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். விசுவாசம் கொண்டதன் பின்னர் கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அக்கிரமக்காரர்கள். (அல்குர்ஆன் 49:11)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

உணவில் அல்லாஹ்வின் அருள்

உணவின் ஒழுங்குகள்அச்சிடுகமின்-அஞ்சல்
நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.
1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)

2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்.

3. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் 
என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்

4.சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.

5. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

6. வலது கையால் உண்ணவேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி , அபூதாவூத்

7. சாப்பிடும் போது நமக்கு அருகிலுள்ளதையே சாப்பிட வேண்டும்.

8.  வீண்விரயம் பண்ணக்கூடாது.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன் :7:31 

9. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும்.
உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம், அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

10. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.
ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி

11. உணவில் குறைசொல்தல் கூடாது
எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.  புகாரி, முஸ்லிம்

12. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை எடுத்து கழுவி சாப்பிட வேண்டும்.
உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்

13. உணவில் ஊதக்கூடாது

14. பானங்களை மூன்று முறை குடிப்பது.
நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

15. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணக் கூடாது.
தங்கம், வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள், மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

16. பச்சையாக வெங்காயம் இன்னும்; பூண்டை சாப்பிட்டால பள்ளிக்குள் செல்லக்கூடாது
யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

17. கூட்டாகசேர்ந்து சாப்பிடுவது.
இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா

17.கூட்டாக சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி கூடுதலாக எடுத்து உண்ணக்கூடாது.
உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். திர்மிதி, இப்னுமாஜா

18. உணவில்  ஈ விழுந்து விட்டால்
உங்கள் ஒருவரின் (உணவுப்) பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

19. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும்.
உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையளிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

20. விருந்துக்கு அழைக்கப்படாதவரை அழைத்துச்சென்றால்...
நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அழைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து) உண்பதற்கு உத்தரவளியுங்கள், நீங்கள் (உத்தரவளிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். புகாரி, முஸ்லிம்

21. விருந்தளித்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.

(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள. ஆதாரம் : திர்மிதி

நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின்) ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின்) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம், திர்மிதி

உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும், பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பிரார்த்தனை


சந்தேகமின்றி ஒரு விசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்க வேண்டும். அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான். உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 186)
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், "நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்". (அல்-குர்ஆன் 40: 60)
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை,
1. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2.
அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.
3.
அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்.
ஆகவே வல்ல இறைவன் அல்லாஹுவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவன் நமது பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும் மன்னிப்பான்.
ஆனாலும், குறிப்பாக இங்கு கூறப்படும் நேரங்கள், நிலைகள், இடங்களில் பிரார்த்தனைகளை அதிகமாக செய்ய வேண்டும். அதேபோன்று பிரார்த்தனை செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால் அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வான்.
பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்
1. தூய மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2. பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
3. பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
4. அவசியத்தைக்கூறி பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. (அதாவது அல்லாஹ்விடம் ஒன்றிரண்டு முறைகள் பிரார்த்தனை செய்து, கேட்டது கிடைக்கவில்லையானால், அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு, பிரார்த்தனையை விட்டுவிடுவது கூடாது)
5. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.
6. சந்தோஷ நேரத்திலும், கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.
7. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது.
8. தன் குடும்பம், பொருள், பிள்ளை மற்றும் தனக்கும் கேடாக பிரார்த்தனை செய்யக் கூடாது.
9. சத்தத்தை மிகவும் உயர்த்தாமலும் மிகவும் குறைக்காமலும் அவ்விரண்டிற்கும் மத்தியில், நடு நிலையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
10. செய்த பாவத்தை மனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக பிழை பொறுப்புத் தேடி, அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை உளமாற ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
11. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
12. தெளிவான உள்ளத்தோடும் பயபக்தியோடும் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்து, அவனது தண்டனையிலிருந்து பயந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
13. மற்றவர்களின் பொருளை எடுத்து அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அந்தப் பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபின் அப்பாவத்திற்காக தவ்பாச் செய்ய வேண்டும்.
14. (பிரார்த்திற்கும் ஒவ்வொன்றையும்) மும்மூன்று தடவை பிரார்த்திக்க வேண்டும்.
15. கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
16. பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்.
17. முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும்.
18. ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். "துஆ" ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
19. முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். (இறைவா! எனது பாவங்களையும், இன்னாருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக என்று கேட்பது போல்).
20. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லது உயிரோடு வாழக்கூடிய நல்லவர்களிடம் (தனக்காக) பிரார்த்தனை செய்யும்படி கேட்டு (இஸ்லாத்தில் வஸீலா தேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இம்மூன்று வகைகளில் ஒன்றைக் கொண்டு) அல்லாஹுவிடம் உதவி (வஸீலா) தேடவேண்டும்.
21. உணவு, குடிபானங்கள் அணியும் ஆடை இவைகள் ஹலாலானவைகளாக இருக்க வேண்டும்.
22. பாவமான காரியங்களுக்காக அல்லது இரத்த உறவுகளை முறிப்பதற்காக பிரார்த்தனை செய்யக் கூடாது.
23. பிரார்த்தனை செய்பவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்
1. இரவின் நடுப்பகுதி
2.
இரவில் கடைசி மூன்றாவது பகுதி
3.
ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)
4.
அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
5.
பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது
6.
மழை பொழியும் போது
7.
உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது
8. (
தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது
9.
ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை
10.
அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை
11.
தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை
12.
பிரயாணியின் பிரார்த்தனை
13.
பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை
14.
சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
15.
நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
16.
கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.
17.
ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் பிரார்த்தனை.
18. (
முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் பிரார்த்தனை
19.
நோன்பாளியின் பிரார்த்தனை.
20.
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் பிரார்த்தனை



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

இஸ்லாமிய சீனா !

உலகெங்கிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதை தடுக்க அல்லது கட்டுக்குள் கொண்டு வர மேற்குலக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூற, அது உண்மையாகிவிடும் எனும் கோயபல்ஸ் தத்துவத்தை போன்று இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக அவதூறு பிரச்சாரங்களை செய்தும் வருகின்றது. அதையும் மீறி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாக ஏற்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் அவை தயங்குவதில்லை. இந்த பாணியில் மேற்குலகம் செயல்பட, சீனா இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. சீனாவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இதை ஜீரணிக்க இயலாத சீன அரசு முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட்டுள்ளது.
சிங்கியாங்கின் தலைநகரான உரும்கியில் முஸ்லிம்கள் 90 சதவீதம் வசித்து வந்தனர். ஆனால் சீன அரசு திட்டமிட்டு அங்கு ஹன்சீனர்களை குடியமர்த்தியது. அங்கு நான்கில் மூன்று பங்கு சீனர்களை அவ்வாறு குடியமர்த்தி ஹன்சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது. கலவரத்திலும் கலவரத்திற்கு பின்னரும் முஸ்லிம்களே பாதிக்கப்பட்டனர். பாதிப்படைந்த முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் போராடினாலும்; அரசால் அடக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் தடை செய்யப்பட்டனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மாகணங்களில் அரசு வலுக்கட்டாயமாக சீனர்களை திணித்ததால் 41 சதவிகித ஹன்சீனர்கள் அவ்விடங்களில் குடியேற்றப்பட்டு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இவ்வாறு சீனா, முஸ்லிம்களிடத்தில் கடும் போக்கை கடைபிடித்து வந்தது. அதன் காரணமாக அன்றாட அலுவலுக்கு தடை ஏற்படுமளவிற்கு அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது. அதை அடக்கும் எண்ணத்துடன் இஸ்லாமியர்களுக்குள் கடும் கட்டுப்பாட்டை சீன அரசு விதைத்தாலும் அது கட்டுக்கடங்காமல் போவது ஒருபுறமிருக்க, மறுபுறமோ சீனர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணமிருக்கின்றனர்.
சீனாவில் மட்டுமின்றி சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா வருபவர்களும் வேலை நிமித்தம் வருவபர்களும் இஸ்லாத்தை படித்தவுடன் அதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சீனர்களின் இந்த இஸ்லாமிய வரவு சவுதி அரேபியாவில் மிகவும் அதிகரித்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. மினா, அரஃபா, முஸ்தலிஃபா வுக்கிடையேயான ரயில்வே திட்டத்தை ஏற்று செயல்படுத்திவரும் சீனக்கம்பெனியின் மேலாளர் உட்பட 17 பேர் கடந்த வாரம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு இதே குழுவை சார்ந்த 660 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனப்பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அங்கு இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டதாலும் சீன அரசு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதாலும் சவுதி அரேபியாவுக்கு வரும் சீனர்கள் இஸ்லாத்தின் யதார்த்த நிலையை புரிந்தவுடன் அதை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு சீனாவை விட்டு வெளிவரும் சீனர்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்பது சீன அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா இஸ்லாமிய மயமாகி வருகின்றது என போப் ஆண்டவர் ஒருபுறம் கவலையோடு கூற, இன்னொரு புறம் ஆசிய நாடுகளும் இஸ்லாமிய மயமாவது சீனா போன்ற ஆதிக்க ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை இது உண்மைப்படுத்துகிறது.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini