அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

கல்வி பயில்வீர்.

தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தையும், கற்பதின் அவசியத்தையும் இவ்வளவு சிறப்பாக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது அன்பர்களே.

மேலைநாட்டு கல்வியாளர் ஒருவர் அவருடைய பங்கிற்கு கல்விக்கு இவ்வாறு முக்கியத்துவம் தருகிறார் அதாவது
இன்று நீ கல்வி கற்றுக் கொண்டு நாளை கற்பதை நிறுத்திவிட்டால், நாளை மறுநாள் நீ கல்வி கற்காதவனாகி விடுவாய்
If u are educated today, leave education tomorrow, you are uneducated on day after tomorrow
ஆக கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் நாம் தொடர்ந்து கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறது. ஒரு வரலாற்று நிகழ்வுடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்பது சாலச் சிறந்ததாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய பத்ருப் போரின் வெற்றிக்கு பிறகு எழுபதிற்கும் மேற்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போர் கைதிகளாக நபி(ஸல்) அவர்கள் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். அவர்களை பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் எவர் முஸ்லிம்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்களோ அவருக்கு நான் விடுதலை அளிப்பேன்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கல்வியை நபியின் வழித்தோன்றல்களாகிய நாம் எந்த அளவிற்கு பேணிக் காக்கிறோம் என்பதை யோசித்தால் நமக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது அன்பர்களே!

இங்கு கல்வி என குறிப்பிடப்படுவது நற்பயன்களை தரக்கூடிய அறிவை. அதாவது, அடிப்படைக் கல்வியான மார்க்க கல்வி, ஏட்டுக் கல்வி, அதனைத் தொடர்ந்து நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளவும், அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் தொடர்ந்து நாம் கற்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொள்ளவும்.

கல்விக்கும் நமது இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்பொழுது எந்தளவில் உள்ளது என்பதை கணக்கிட்டால் நிச்சயமாக பூமிக்கும், சூரியனுக்குமுள்ள தூரத்தைவிட அதிகம் என்றே கருதவேண்டியுள்ளது.

அன்பர்களே! இஸ்லாம், கல்வியை ஆதரித்த அளவிற்கு உலகிலுள்ள வேறு எந்த கொள்கையும், கோட்பாடுகளும் கல்வியை ஆதரிக்கவில்லை என்பதுதான் வரலாறு. இந்த அடிப்படை அதிகாரத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டோமா என்பதுதான் நமக்குள் இருக்கும் பெரிய தகராறு.

நாம் எதில் தெளிவாக இருக்கிறோமோ இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் என்பதில் மட்டும் மிக மிகத் தெளிவாக இருக்கிறோம். அதனால்தான் நம்மை முன்னிலைப்படுத்தி எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும் நாம் ஒரு சிறுபான்மையினர் என்று ஒப்பாரி வைத்தே ஓய்ந்து விடுகிறோம்.

ஆனால் சிறுபான்மையினராகிய நம்மில் ஒரு பகுதியினர் திறமை மற்றும் கல்வி கற்க ஆர்வம் இருந்தும் வசதி இல்லாததால் கல்வி கற்காமல் உள்ளனர் ஒரு பகுதியினர் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை, மற்றொரு பகுதியினரோ கல்வியை நன்கு மேம்படுத்திக் கொண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டே போய்க் கொண்டும் உள்ளனர்.

நமக்குள் இப்படி ஒரு நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பதை நிதானித்தால் நமக்கு ஒற்றுமை உணர்வு குறைவு என்பதைவிட சமுதாய உணர்வு அதிகம் இல்லை என்றே அர்த்தமாகிறது.

நம் சமுதாயத்தில் இருக்கும் இப்படிப்பட்ட குறைப்பாட்டை நிவர்த்தி செய்யவும் இந்த முரண்பாட்டை சமன் செய்யவும் ஒரே வழி கல்வியைத்தி வைப்பது தான்.

ஆம்! சகோதரர்களே இஸ்லாத்தை எத்தி வைப்பது போல் நம் இஸ்லாமிய மக்களிடையே கல்வியையும் எத்தி வைப்பது அவசியம் என்றே தோன்றுகிறது.

கல்வி என்பது ஒரு பொதுவுடைமை. அது தனிப்பட்ட ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் சமர்பணம் ஆனதல்ல. நம் இஸ்லாமிய சமுதாயத்தினர் மட்டும் கல்வி பயில வேண்டும் என்பது எம்முடைய குறுகிய மனப்பான்மையும் அல்ல. ஆனால் ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற சமுதாயத்தினரைவிட நம் சமுதாயத்தில்தான் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும், கற்பதின் அவசியத்தை புரிந்தவர்களின் எண்ணிக்கையும், அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக உள்ளது என்பதுதான் இக்கட்டுரையின் ஆதங்கமே.

உலகில் இஸ்லாம் பரவத் தொடங்கிய பிறகுதான் கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலை செயலில் வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமது வாழ்க்கையின் ஆதாரமாகிய திருக்குர்ஆன், கல்வி கற்பதையும் அறிவைத் தேடுவதையும் பற்றி பற்பல அத்தியாயங்களில் நமக்கு அறிவுரை வழங்குகிறது.

கல்வி கற்பதின் மூலமும், அறிவைப் பெருக்கிக் கொள்வதின் மூலமும்தான் விழிப்புணர்ச்சி ஏற்படும். விழிப்புணர்ச்சி அதிகமானால், அறியாமை அகலும். அறியாமை அகன்றால் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும். சமுதாய உணர்வு உள்ளவர்களிடம் தான் சமுக அக்கறையும் இருக்கும் என்பது நடைமுறை உண்மை.

ஆக கல்வி என்பதும் நமக்கு வலியுறுத்தப்பட்ட ஒரு விஷயம் என்று புரிகிறது. ஆனால் இயன்றவரை அதை நாம் ஏன் கடைப்பிடிப்பதில்லை என்றுதான் புரியாத புதிராக உள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை நம்மில் ஏன் இப்படி ஒரு தேக்கநிலை என்று யோசித்தால் நம்மில் பல பேர் கல்வி என்பது மனதிற்கு ஒரு இணக்கமான விஷயம்தான் என்பதை புரிந்து கொள்ளாமல் உள்ளனர் என்பதே தெளிவாகிறது.

அறியாமையும், மூடநம்பிக்கையும்தான் அழிவுப் பாதைக்கு வழிக்காட்டும் கலங்கரை விளக்குகள் என்பது நமது அறிவிற்கு தெரிந்தாலும் அதை நமது உள்ளம் ஏற்றுக் கொள்வதில்லை. ஷைத்தான் கெட்டதைத் தான் அழகாக்கிக் காட்டுவான் என்பதும் நமக்கு உறைப்பதில்லை. போதிய விழிப்புணர்ச்சியின்மையும், அலட்சிய குணமும்தான் நம் சமுதாயத்தில் உள்ள பலர் இறைவனுக்கு இணைவைக்கும் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணரவும் நாம் முற்படுவதில்லை.

அல்லாஹ்வின் படைப்புகளில் முழுமையான படைப்பு மனித இனம்தான் அந்த மனித இனத்திற்கு பகுத்தறிவு மூலம் சிந்திக்கவும் பொறுப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். ஆக அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்வது கடமை என்பதால் கல்வி கற்பது அவசியம் என்பதை முதலில் உணருங்கள்.

கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் போதே அதை தெளிவாகவும் கற்க வேண்டும் என்ற பொருளும் அதில் உள்ளது. தெளிவான கல்விதான் நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தெளிவான கல்வியின் அவசியத்தை சொல்லும் இவ்வேளையில் ஒன்றை குறிப்பிட்டு சொல்வது கடமை என்றே கருதுகிறேன்.

உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுரை என்று அரபி மொழியில் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆனை நம்மில் பலபேர் மூல மொழி அரபியிலேயே படித்திருந்தாலும் அதில் எவ்வளவு பேர் பொருள் உணர்ந்து தெளிவாக கற்றுள்ளனர் என்பதை ஆராய்ந்தால் வெட்கித் தலை குனிய வேண்டியநிலை நமக்கு. பொருள் உணர்ந்து படிக்காததாலும், தெளிவாக புரிந்து கொள்ளாததாலும் தான் குர்ஆனின் கருத்துக்கள் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் உள்ளது (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக) ஆதலால்தான் இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்களுக்கு துணை போகிறோம். மார்க்க வழியை மனம் போன போக்கில் பின்பற்றுகிறோம்.

சகோதரர்களே நம்மில் பலருக்கு கல்வி கற்று என்ன பயன், இஸ்லாமியருக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது, நமது திறமைகள் அங்கீகாரம் ஆவதில்லை என்று பலவிதமான ஆதங்கமும், மனக்குறைபாடுகளும் உள்ளது இதை மறுப்பதற்கில்லை எனினும் இவையே காரணங்களாக்கிக் கொண்டு நமது திறமைகளை முடக்கிக் கொண்டும் நம்மை கேலிப்பொருளாக மற்றவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருப்பதிலும் என்ன நன்மை கண்டோம் இதுவரையில்?

கல்வியின் நிலை குறித்து இப்படி ஆதங்கப்படும் அதே வேளையில் குறைந்த அளவு ஆறுதலும், சந்தோஷமும் அடையும் வண்ணம் சில நல்ல காரியங்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் ரெசிடென்சியல் பள்ளிகளில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த பள்ளிகளில் நமது தீன் கல்வியோடு உலகக் கல்வியும் நல்ல முறையில் போதித்து வருகிறார்கள். அத்துடன் படிப்பைச் சார்ந்த மற்ற துறைகளுக்கு பயிற்சியும் உடல்நலம் பேணுவதற்கு தனி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. சகோதரர்களே! இது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றம். இந்த ஒரு சில பள்ளிகள் அல்லாஹ்வின் ரஹ்மத்தால் கூடிய விரைவில் பல பள்ளிகள் ஆக வேண்டும் என்பது நம் அனைவருடைய ஆசையாக இருக்கட்டும். அதற்கு நம்மால் இயன்றளவு என்ன செய்யலாம் என்பதையும் சற்று சிந்தியுங்கள். அப்படி சிந்திக்கும் வேளையில் கல்வியின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் கல்வி வளரவும் ஏதேனும் ஒரு விதத்தில் கல்விற்கு உதவி புரிய முனைந்திருங்கள்.

கல்வி கற்பதற்குண்டான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வதில் மட்டும் எப்பொழுதும் தாமதம் செய்யாதீர்கள். கல்விக்காகவும் கல்வியைப் பற்றி சிந்திக்கவும், படிக்கவும் தினந்தோறும் குறைந்த நேரமாவது ஒதுக்குங்கள்.

நாம் செய்யும் ஒரு சிறு நன்மைக்கு அல்லாஹ் நமக்கு பல மடங்கு கூலி கொடுப்பான் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
நல்ல கண்ணோட்டமும், தெளிவான சிந்தனையும், முற்போக்கு எண்ணமும் இல்லாத காரணத்தால் தான் பல துன்பங்களும் இழிவான செயல்களும் அரங்கேற ஏதுவாக உள்ளது என்பதை வெளிப்படையாக உணருங்கள். வாழ்க்கையின் தத்துவமே படிப்படியாக முன்னேறுவதுதான் என்கிற கொள்கையில் உறுதியாக இருங்கள்.

அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போய்விட்ட சொத்து அது எங்கே காணக்கிடைத்தாலும் அவரே அதற்கு உரியவர் ஆவார் என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சொல்லுகிணங்க அறிவைத் தேடி நாம் அலைவோம்.

அறியாமை என்னும் இருள் அகன்று விழிப்புணர்ச்சி எனும் வெளிச்சம் பரவ குறைந்த பட்சமாக ஒரு மெழுகுவர்த்தி அளவேனும் கல்விக்காக உதவி புரிந்திட முன்வாருங்கள்

..ஆதலினால் கல்வி பயில்வீர்... எல்லா புகழும் இறைவனுக்கே!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini