அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

சூனியமா...?


பில்லி சூனியம் உண்டு என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் அழுத்தமாக இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு-அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது-என்ற ஹதீஸ்கள் மற்றும் விளக்கவுரைகள் வழியாக வரும் செய்திகளேயாகும்.

ஆழ்ந்த திறனாய்வு செய்து - எதையும் குர்ஆனுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் நபி(ஸல்) அவர்கள் பற்றி வரும் செய்திகளை முன்னிருத்தியே தமது சூனியம் பற்றிய நம்பிக்கையை அழுத்தமாக்கிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவுகளைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மிக சில அறிஞர்களே இது குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டுள்ளார்கள்.

எனவே இதுபற்றி ஒரு தெளிவான விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திடம் கொண்டுப்போக கடமைப்பட்டுள்ளோம்.

சூனியம் உண்டா..இல்லையா என்பது பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை. இறைத்தூதருக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பலாமா..என்பது மட்டுமே ஆய்வின் நோக்கம்..

இந்தப் பிரச்சனையை நாம் அலச துவங்கும் போது முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். செய்தி வழியாக வரும் தகவல்கள் மட்டுமே இந்த நம்பிக்கையை முஸ்லிம்களிடம் விதைத்துள்ளது. தலைமுறைகளை கடந்து வரக்கூடிய செய்திகளாக இருந்தாலும் அதை பரிசீலிக்கும் உரைக்கல்லாக குர்ஆன் நம்மிடம் உள்ளது.

தீய விளைவுகளை - இறை நம்பிக்கையில் பலவீனங்களை - முரண்பாடுகளை சொல்லும் எந்த செய்தியையும் முதலில் குர்ஆனில்தான் உரசிப் பார்க்க வேண்டும்.. அடுத்தக்கட்டமாக தான் ஆட்களை பற்றிய ஆய்வை மேற்கொண்டு செய்திகளை - அதாவது ஹதீஸ்களை - தரம் பிரிக்கலாம். இஸ்லாத்தை விளங்கும் எல்லா விஷயங்களுக்கும் இதைத்தான் பொது அடிப்படையாக கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது சம்பந்தமாக குர்ஆனில் நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஒரு சின்னஞ்சிறிய அறிவிப்புக்கூட இல்லை. மாறாக மறுக்கும் வசனங்கள் உள்ளன. அதை பார்க்குமுன் நபி -ஸல்- அவர்களின் நிலைப்பற்றி நாம் ஒரு தெளிவான முடிவுக்கு -ஆதாரங்களின் அடிப்படையில்- வரவேண்டும். கரு உருவானது - பிறந்தது - வளர்ந்தது- பசி - உறக்கம் - தாகம் - இயற்கைத் தேவைகள்- உடல் சார்ந்த உணர்வுகள் இது எல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்றுதான் நபி -ஸல்- அவர்களுக்கும் இருந்தது.

'(நபியே) நீர் கூறும் நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே..' (அல்குர்ஆன்-18:110) 

இந்த வசனத்திலிருந்து நாம் மேலே சொன்ன கருத்து தெளிவாகிறது. எல்லா மனிதர்களையும் போன்ற இயல்புடையவர்களாக நபி -ஸல்- இருந்தாலும் ஒரு விஷயத்தில் எவரும் நெருங்க முடியாத சிகரத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள் அதுதான் இறைத்தூதர் என்ற முத்திரையான பொறுப்பு. தன் பொறுப்பைப்பற்றி அதே வசனத்தில் விளக்க சொல்கிறான் இறைவன்.

'உங்களுடைய நாயன் ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது..' (அல் குர்ஆன்--18:110)

இறைத்தூதர் என்ற பொறுப்பை ஏற்ற பிறகு சராசரியான மனித சிந்தனா ஓட்டத்திலிருந்து பெரும் வேறுபாட்டை சந்தித்தார்கள் முஹம்மத் -ஸல்- அவர்கள். அவர்களின் உடல் சார்ந்த இயக்கம் சராசரியான மனித தன்மையுடன் ஒத்திருந்தாலும் பல நேரங்களில் பலவீனப்பட்டுப் போனாலும் இறை செய்தியின் தொடர்புடன் இருந்த அவர்களின் சிந்தனை சக்தி பலவீனத்தின் வாடையைக்கூட நுகராமல் பெரும் புரட்சி செய்து கொண்டிருந்தது. இந்த புரட்சியால் ஏற்படத் துவங்கிய சமூக மாற்றங்கள் எதிர்ப்பாளர்களை நிலை குலைய வைத்தது.

முஹம்மதால் ஏற்படும் இந்த சமூக மாற்றத்தை (எதிரிகளின் வார்த்தையில் சொல்வதானால் சமூக சீரழிவை) தடுப்பதற்கு எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி வேலைகளில் நபி -ஸல்-உடல் ரீதியாக சில துன்பங்களுக்கு இலக்காக்கப்பட்டார்கள். எதிரிகளின் எத்தகைய திட்டங்களும் நபி -ஸல்- அவர்களின் இறைப்பணியில் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை -செய்ய முடியவில்லை.

இதற்கு காரணம் இருக்கவே செய்கிறது.

'(நபியே) நிச்சயமாக நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர்..' (அல் குர்ஆன்.52:48) 


தூதுத்துவ பணி முஹம்மத் -ஸல்- மீது சுமத்தப்பட்டது முதல் அவர்கள் இறைவனின் நேரடி கண்காணிப்பில் இணைந்து விட்டார்கள். இதன் அர்த்தம், எந்த பணியிலிருந்து நபி -ஸல்- அவர்களை திருப்பிவிட வேண்டும் என்று எதிரிகள் திட்டம் தீட்டினார்களோ அந்த திட்டங்களில் எதுவும் பலனளிக்கப் போவதில்லை காரணம் இறைவனின் நேரடி கண்காணிப்பு.
இப்போது சிந்திப்போம்,

மதீனாவில் வாழ்ந்த லபீத் பின் அஸ்லம் என்ற யூதன் நபி -ஸல்- அவர்களுக்கு சூனியம் செய்ததாக சில ஹதீஸ்கள்-சில விரிவுரைகள் கூறுகின்றன. யூதர்களின் தில்லுமுல்லுகள் திருக்குர்ஆன் மூலம் தோலுரித்துக் காட்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத யூத சக்தி இப்படி ஒரு திட்டத்தை நம்பி செய்திருக்கலாம். இதன் மூலம் நபி -ஸல்- அவர்களின் சிந்தனை ஓட்டத்தை, செய்தி வெளிபாடுகளை தடுக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். இப்படி நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இது நபி -ஸல்- அவர்களிடம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்க முடியாது ஏனெனில் சிந்தனை ரீதியில் அவர்களின் பணியில் எத்தகைய இடையூறும் ஏற்படாத வண்ணம் இறைவன் அவர்களை கண்காணித்து வந்துள்ளான்.

ஹதீஸ்கள் கூறுவது போன்று நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டு நடக்காததை நடந்ததாகவும், செய்யாததை செய்ததாகவும் சொன்னார்கள் என்பது உண்மையானால் அந்த நேரங்களில் இறைவனின் கண்காணிப்பு தளர்த்தப்பட்டு சிந்தனை ஓட்டத்தில் ஷைத்தானின் இடையூறு ஏற்பட்டு விட்டது என்று பொருள்படும். எந்த நேரமும் இறை செய்தியின் வெளிப்பாட்டை எதிர்பார்த்திருந்த நபி-ஸல்- அவர்களுக்கு சூனியத்தின் தாக்கம் ஏற்பட்டது என்று நம்புவது அவர்கள் கொண்டுவந்த வஹியில் கூட சந்தேகத்தை ஏற்படுத்தி விடலாம்.

செய்யாததை செய்ததாக - நடக்காததை நடந்ததாக சொல்லும் நிலை இறைத்தூதருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த நேரங்களின் மனக்குழப்பத்திலிருந்து வஹியை பிரித்தறிவித்திருக்க முடியாது. ஏனெனில் குழப்பத்திற்கு ஆட்பட்ட இதயம் - ஆட்படாத இதயம் என்று இறைவன் எந்த மனிதருக்கும்--நபிமார்கள் உட்பட--ஏற்படுத்தவில்லை

'எந்த மனிதருக்குள்ளேயும் இறைவன் இரண்டு இதயங்களை ஏற்படுத்தவில்லை..' (அல் குர்ஆன்,33:4) 

இதிலிருந்து நபி-ஸல்-அவர்களுக்கு துளியும் சூனிய தாக்கம் நிகழவில்லை என்பதை விளங்கலாம்.

நாம் இந்த சூனியக்கதையை மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

நபி -ஸல்- அவர்களின் தூதுத்துவத்தை உலகம் முழுவதுக்குமாக மிக விரிந்த நிலையில் இறைவன் ஏற்படுத்தினான்.

நாடு-இனம்-மொழி-எல்லாவற்றையும் கடந்துப் போகக்கூடிய சத்திய அழைப்பும்--சத்திய அழைப்பாளரும் மிக எச்சரிக்கை உணர்வோடு செயலாற்றி இருக்க வேண்டும். உலகம் முழுமைக்கும் இனி வரும் காலாகாலத்திற்கும் இந்த அழைப்பும்-அந்த அழைப்பாளரும் தான் வழிகாட்டிகள் என்று பிரகடனப் படுத்தும்போது அது எத்துனை புனிதத்துவம் வாய்ந்த பிரகடனம் என்பதை கண்டு மெய் சிலிர்க்கலாம். இப்படிப்பட்ட அழைப்பையும் அழைப்பாளரையும் ஒப்பு நோக்கும் போது அழைப்பில் குழப்பம் ஏற்படவில்லை ஆனால் அழைப்பாளரிடம் சூனியத்தால் குழப்பம் ஏற்பட்டது என்று கூறினால் அதை எந்த அறிவாளியால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு மன குழப்பம் ஏற்பட்ட நேரங்களில் பிறருக்கு - சமூகத்திற்கு பயன்படும் எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் அவரை சாட்சியாளராக கொண்டு வர மாட்டோம். திருமணத்திற்குரிய சாட்சி, கொடுக்கல் வாங்களுக்குரிய சாட்சி, சமூக நல திட்டங்களுக்கான சாட்சி எதிலும் அவர் இடம்பெற மாட்டார். ஏனெனில் அவர் அந்த சந்தர்ப்பங்களில் மன குழப்பக்காரர்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மிக,மிக சாதாரண விஷயங்களுக்குக் கூட மனக் குழப்பக்காரர் சாட்சியாளராக மாட்டார் எனும் போது மொத்த உலகுக்கும் வழி காட்டி என்று சொல்லப்பட்டவருக்கு மன குழப்பம் ஏற்பட்டால் அவரை எப்படி சாட்சியாளராக்க முடியும்?.

'(நபியே) நாம் உம்மை சாட்சியாளராகவும்............ஆக்கி இருக்கிறோம்.' (அல் குர்ஆன்,33:45-48:8)

இறைவனால் சாட்சியாளராக ஆக்கப்பட்ட ஒருவருக்கு சூனியத்தால் மன குழப்பம் ஏற்படுமா...?

நாம் மறுப்பதற்குரிய அடுத்தக் காரணம்:

சூனிய நிவாரணத்துக்கு இறக்கப்பட்டதாக கருதப்படும் சூராக்களின் கருத்துரைகள் மற்றும் வரலாறு.

நபி-ஸல்- அவர்களுக்கு சூனிய நிவாரணியாக சூரத்துந்நாஸ்-சூரத்துல் ஃபலக் ஆகிய இரண்டு அத்தியாயங்கள் மதீனாவில் இறங்கியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலோர் இவை மக்காவில் இறங்கியதாகவே கருதுகிறார்கள். சூனியத்திற்காக இவை இறங்கியதென்றால் அதன் வரலாறு சந்தேகமற தெளிவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. மாறாக வரலாற்றிலும் சூனியநிலை-குழப்ப நிலையே உள்ளது. இதையும் கவனத்தில் வைப்போம்.

-முஅவ்விதைன்- என்று போற்றப்படக் கூடிய அந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துரைகள் கூட சூனியம் பற்றி தெளிவாக பேசவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

1) நீர் கூறும், மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

2) அவனே மனிதர்களின் அரசன்

3) அவனே மனிதர்களின் நாயன்

4) பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்பு வேண்டுகிறேன்)

5)அவன் மனித உள்ளங்களில் தேவையில்லாத சந்தேகங்களை போடுகிறான்

6)(இத்தகய சதிகாரர்கள்)மனிதர்களிலும்-ஜின்களிலும் உள்ளனர். (அல் குர்ஆன்,114 வது அத்தியாயம்)

7)நீர் கூறும் அதி காலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்

8)அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்

9)இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்

10)முடுச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்

11)பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் (இறைவா உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) 


பதினோரு வசனங்களைக் கொண்ட இந்த இரு அத்தியாயங்களில் எங்காவது சூனியம் பற்றி பேசியுள்ளதா..? எங்குமே இல்லை.

10வது வசனத்தில் முடுச்சுகளில் ஊதுவது சூனியம் பற்றியது தானே..என்று எவராவது எண்ணலாம். எனவே அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

உண்மையில் 10 வது வசனம் சூனியம் பற்றி பேசுவதாக இருந்தால்-நபி-ஸல்- அவர்களுக்கு சூனியம் செய்தவன் ஆண் என்று செய்திகளில் கூறப்படுவதால்-இறைவன் ஆண்பாலிலேயே அதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். மாறாக முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். யாருடைய சதிக்கு எதிராக இறை வசனம் இறங்குகிறதோ அவர்களை முன்னிலைப் படுத்தியே இறைவசனம் பேசும்.(அபுலஹப்-பிர்அவ்ன் போன்றவர்களை அடையாளங்காட்டும் வசனங்களை இதற்கு உதாரணமாக்கலாம்)

மனங்களை தடுமாறச் செய்யும் சூனியம் பற்றி இந்த வசனம் பேசினால் அந்த பெரும் கெடுதியாளனை (அதாவது ஆண்பாலில்) சுட்டி இருக்கும் வசனம். அப்படி இல்லாமல் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று இறைவன் கூறுவதால் வேறு ஏதோ அதில் உள்ளது என்பதை புரியலாம்.

இதை விளங்கவோ-புரியவோ பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.

குடும்பங்கள் பிளவுபட்டு, சொந்த பந்தங்கள் பிரிந்து, மன குழப்பங்கள் - சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு பெண்களின் குசு-குசு பேச்சே அதிக பங்கு வகிக்கின்றது. தலையணை மந்திரம்- முந்தானை முடுச்சு என்றெல்லாம் இந்த பேச்சுக்களுக்கு புனைப் பெயர் உண்டு. இந்த சிக்கல் பெண்களின் தரப்பிலிருந்து வருவதால் முடுச்சுக்களில் ஊதும் பெண்கள் என்கிறான் இறைவன். இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதால் சமாதான வாழ்வை விரும்புவோர் இதிலிருந்து கட்டாயம் பாதுகாப்புத் தேட வேண்டும்.

பெண்களிடம் இருக்கும் அந்த இயல்புக்குரிய வார்த்தையை தான் இறைவன் இங்கு பயன் படுத்தியுள்ளான்.

10 வது வசனமில்லாமல் வேற எந்த வசனமும் சூனியம் பற்றி பேசவில்லை. 10வது வசனமும் இதைப்பற்றி பேசவில்லை என்பதை இப்போது விளங்கி இருக்கலாம்.

எனவே பொதுவாக எல்லா கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்பு தேடும் முகமாகவே இந்த அத்தியாயங்கள் இறக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்துக் கொள்ளலாம். குர்ஆனில் பரவலாக பிரார்த்தனைகள் இடம் பெறுகின்றன. அதே அடிப்படையில் தனி பிரார்த்தனைகளாக இல்லாமல் பிரார்த்தனைக்குரிய அத்தியாயங்களாகவே இவை அமைந்துள்ளன. மாறாக சூனியத்திற்காக இறக்கப்படவில்லை.

நாம் மறுப்பதற்குிய அடுத்தக்காரணம்:
சூரத்துல் ஃபுர்கான் 25 வது அத்தியாயத்தின் 8-9 வது வசனங்கள்.

'சூனியம் செய்யப்பட்ட ஓரு மனிதரையேயன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள் (25:8) 

நபி-ஸல்- அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை நோக்கி சூனியம் செய்யப் பட்டவரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது.

இதற்கு இறைவனின் பதில் என்ன..?

'(நபியே) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை கூறுகிறார்கள் என்று பாரும். அவர்கள் வழி கெட்டுப்போய் விட்டார்கள். நல் வழியை காண சக்தி பெற மாட்டார்கள்.' (25:9)

நபி-ஸல்- அவர்களுக்கு செய்யப்படாத- தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு பொய்யை எதிரிகள் உதாரணமாக்கியதை இறைவன் எடுத்துக்காட்டி அவர்களை வழி கேடர்கள் அநியாயக்காரர்கள் என்கிறான். 'நபியே நீர் கவனியும்' என்று நேரடியாக நபியை தூண்டுவதிலிருந்தே இது பற்றிய எல்லாமும் கதை தான் என்பது தெளிவாகிறது.

நபி-ஸல்- அவர்களுக்கு கவிதை பற்றித் தெரியாது. ஆனாலும் எதிரிகள் கவிஞர் என்று பெயர் சூட்டினார்கள். அதேபோன்றுதான் சூனியம் எதுவும் தீண்டாமல் இருக்கும் போதே சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகளால் பெயர் சூட்டப்பட்டார்கள். அந்த பொய்யுடைய தாக்கம் தான் சில ஹதீஸ்களிலும் விரிவுரைகளிலும் காணப்படுகின்றன.
நபி-ஸல்- அவர்களின் தூதுத்துவத்தில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தும் இந்த பொய்களை புறக்கணிப்பதே அறிவுடமையாகும். (இறைவன் மிக்க அறிந்தவன்) இதை படிக்கும் வாசகர்களுக்கு, இதுபற்றிய எத்தகைய விமர்சனங்களையும் எண்ணங்களையும் கருத்துக்களையும் நீங்கள் எழுதலாம். நிறை இருப்பின் ஏற்போம் தவறு இருப்பின் திருந்துவோம் அல்லது திருத்துவோம்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini