அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

இஸ்லாத்தை தழுவிய சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

            சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 


ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ். 

இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.... 
  

"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.   

அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.

நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன். 

என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?

என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள். 

இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"  

சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.  

இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன். 

இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம். 

தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது. 

இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.     

சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.    

குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன். 
  
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது. 

இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது. 

மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். 

இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.  

அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.  

இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம். 

நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.   

இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....

ஏஞ்சலா கொலின்ஸ்"     

சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....
மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini